மகள் கதறக் கதறக் கழுத்திலிருந்து தாலியை அறுத்து இழுத்துச் சென்ற பெற்றோர்!
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நேற்று பெரும் பரபரப்பைச் சந்தித்தது. காதல் மணம் புரிந்த மகளை, அவரது கழுத்திலிருந்த தாலியைப் பறித்து அறுத்து வீசி எறிந்து விட்டு அவரை பெற்றோர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் அனைவரும் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.
சேலம் அருகே ஜி.கே.கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 28 வயதான இவர் விசைத்தறித் தொழிலாளி ஆழார். இவர் தனது காதலியான கலாவதியை பவானியில் வைத்து மணம் புரிந்தார். இதையடுத்து திருமணத்தைப் பதிவு செய்யவும், போலீஸ் பாதுகாப்பு கோரவும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்ிதற்கு வந்தார்.
அந்த சமயத்தில் கலாவதியின் பெற்றோர், உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். கலாவதியைப் பார்த்த அவர்கள் அவரை நோக்கிப் பாய்ந்து சென்றனர்.தங்களுடன் வருமாறு கூறினர். ஆனால் கலாவதி மறுத்தார். ஆனாலும் சற்றும் மனம் தளராத அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கலாவதியைப் பிடித்து இழுத்தனர். அவர் கழுத்தில் செந்தில்குமார் கட்டியிருந்த தாலியைப் பறித்து அறுத்து வீசி எறிந்து விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாலியைப் பறித்து பெற்றோர் அறுத்து வீசி எறிந்ததால் துடித்துப் போன கலாவதி கதறிக் கதறி அழுதார். ஆனால் அந்த அழுகை குடும்பத்தினர் காதில் விழவில்லை. மாறாக கலாவதியை தரதரவென இழுத்துச் சென்றனர். பின்னர் ஒரு ஸ்கூட்டரில் கலாவதியை ஏற்றி முன்னும், பின்னும் ஒருவர் உட்கார வண்டியைக் கிளப்பிக் கொண்டு பறந்து போய் விட்டனர்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த செந்தில்குமாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் கண் முன்பாகவே காதல் மணம் புரிந்த மனைவியை கொடூரமாக இழுத்துச் செல்வதைப் பார்த்து அவர் கண் கலங்கிப் போய் நின்றார்.
பின்னர் அவரிடம் போலீஸார் என்ன ஏது என்று விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், 4 ஆண்டுகளாக சீலநாயக்கன்பட்டி 7வது கிராஸ் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவரின் விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறேன்.
அப்போது, சுந்தரத்தின் மகள் கலாவதிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. எங்களது காதலுக்கு கலாவதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் பவானியில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் இருவரும் திருமணத்தை பதிவு செய்யவும், பாதுகாப்பு கேட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தோம்.
நாங்கள் வருவதை அறிந்த கலாவதியின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் கும்பலாக வந்து, கலாவதியை என்னிடம் இருந்து பிரித்து இழுத்துச் சென்று விட்டனர். எனவே எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார் கண்ணீர் மல்க. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.