விஜய் செய்த "அந்த" ஒரு தவறு.. குழப்பத்திற்கு இதுவே காரணம்.. ஆடிட்டர் குருமூர்த்தி உடைக்கும் ரகசியம்
சென்னை: தமிழக அரசியலில் நிலவும் நம்பர் கேம் இப்போது க்ளைமாக்ஸை எட்டியிருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்ட ஆலோசனைகள் ரொம்பவே தவறானது என்று கூறியுள்ளார் அரசியல் விமர்சகர் எஸ்.குருமூர்த்தி! அதாவது ஆளுநருக்குக் கொடுத்த கடிதத்தில் விஜய் ஒரு பெரிய தவறை செய்திருந்ததாகவும் அதுவே ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை போட்டதாகவும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறுகிறார்.
தமிழ்நாடு அரசியல் களம் இப்போது மிகப் பெரிய குழப்பத்தில் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் ஆகும் சூழலில், இதுவரை புதிய ஆட்சி அமையவில்லை. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகும் நம்பர் கேமில் திணறி வருகிறார் விஜய். எல்லா குழப்பங்களும் முடிவுக்கு வரவே ஓரிரு நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.

ஆடிட்டர் குருமூர்த்தி
இதற்கிடையே பிரபல ஆங்கில டிவி சேனலான என்டிடிவி-க்கு குருமூர்த்தி அளித்த பேட்டியில் சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். "தவெக தரப்பில் ஒரு மிகப்பெரிய தவறு நடந்துவிட்டது" எனச் சொல்லும் குருமூர்த்தி, அக்கட்சிக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் முதிர்ச்சியற்றவை என விமர்சிக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஆரம்பத்தில் தனிப்பெரும் கட்சி நாங்கள்தான், எங்களை ஆட்சி அமைக்க அழையுங்கள் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைப்பதே சரியான உத்தியாக இருந்திருக்கும் என மூத்த அரசியல்வாதி ஒருவர் விஜய்க்கு அறிவுறுத்தியிருக்கிறார். அப்படிச் செய்திருந்தால், ஆளுநருக்கு வேறு வழியே இருந்திருக்காது.
செய்த ஒரே தவறு
ஆனால், அந்த ஆலோசனையை மீறி, காங்கிரஸ் தரப்பு ஒரு முட்டுக்கட்டை போட்டதாம். தங்களது ஆதரவு கடிதத்தையும் சேர்த்து இணைத்து, இதை ஒரு கூட்டணி ஆட்சியாக முன்னிறுத்த வேண்டும் என அவர்கள் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க அழைப்பு கொடுங்கள் என்ற நிலையிலிருந்து கூட்டணி ஆட்சி என்ற நிலைக்குப் போனதுதான் டெக்னிக்கலாக விஜய்க்குச் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. விஜய்யின் கட்சிக்குக் கொடுக்கப்பட்ட 'பேட் அட்வைஸ்' இது!" என்கிறார்.
ஆளுநர் மாளிகையில் விஜய் கொடுத்த கடிதத்தில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தாலும், அதனுடன் இணைக்கப்பட்ட பட்டியலிலோ 116 பெயர்கள் மட்டுமே இருந்ததாம். இதுவே சிக்கலுக்கு காரணமாக இருக்கிறதாம். இப்போது விஜய்க்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் விசிக தான். திருமா வசம் இரு எம்எல்ஏக்கள் இருக்கும் சூழலில், அவர்களும் வந்தால் ஆதரவு 118ஆக உயரும். இதன் மூலம் ஆட்சியை அமைக்க முடியும்.
காங்கிரஸ் தான் காரணம்
குருமூர்த்தி மேலும் கூறுகையில், "தனிப்பெரும் கட்சி என உரிமை கோரியிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது. யார் சொன்னது அந்த (கூட்டணி அரசு) லெட்டரைக் கொடுக்கச் சொன்னார்கள்? அது தவறு.. காங்கிரஸ் தனது இருப்பைக் காட்டிக்கொள்ளவும், இது விஜய்யின் தனிப்பட்ட ஆட்சி அல்ல என்பதை உறுதிப்படுத்தவும் ஆடிய ஆட்டம் இது. இந்த முதிர்ச்சியற்ற செயலால் விஜய்க்கு மட்டுமன்றி தமிழகத்திற்கே சிக்கல் வந்துள்ளது" எனச் சாடுகிறார் குருமூர்த்தி. தற்போது தமிழக அரசியலில் நடப்பதைக் குதிரை பேரம் என்று குறிப்பிடும் அவர், சில கட்சிகள் டிவியில் ஆதரவு எனச் சொல்லிவிட்டு, கடிதம் கொடுக்காமல் இழுத்தடிப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
விஜய் முதல்வராவாரா?
விஜய் முதல்வராக வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு குருமூர்த்தி, "நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் சிபிஎம் போன்ற கட்சிகள் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காது என நம்பலாம். ஆனால், மறுபக்கத்தில் இருப்பவர்களோ எந்த நேரத்திலும் தாவக் கூடியவர்கள். இது உண்மையில் கேலிக்கூத்தானது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் எல்லா குழப்பங்களுக்கும் நாளை அல்லது திங்கட்கிழமைக்குள் விடை கிடைத்துவிடும்" என்றார்.












Click it and Unblock the Notifications