செந்தூரனின் கோரிக்கைக்காக போராட்டம் தொடரும்-உண்ணாவிரதம் இருந்த வைகோ பேட்டி
சென்னை: செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றக் கோரி ஈழத் தமிழர் செந்தூரன் முருகன் உண்ணாவிரதம் நடத்தி வருகிறார். அவரது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை, திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றக் கோரி ஈழத்தமிழர் செந்தூரன், கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரது கோரிக்கைக்கு ஆதரவாக சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரத போரட்டம் நடைபெறுகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். அவருடன் அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். அப்போது செந்தூரன் முருகனின் கோரிக்கையை நிறைவேறும் வரை, மதிமுகவின் போராட்டம் தொடரும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
மரண வாசலில் போராடும் செந்தூரனின் உயிரை காப்பாற்றவும், சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்ற அவரது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும், கடந்த 27ம் தேதி முதல் மதிமுக தரப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
உலகில் வேறெந்த நாடுகளுக்கு ஈழத்தமிழர்கள் சென்றாலும் அடைக்கலம் கொடுக்கின்றனர். ஆனால் சொந்த நாடான தமிழகத்திற்கு வரும் ஈழத்தமிழர்கள் அகதிகள் என்ற பெயரில் முகாம்களில் அடைக்கப்படுகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்த பொய் வழக்குகளை போட்டு இலங்கை அகதிகளை கைது செய்கின்றனர்.
இதேபோல செங்கல்பட்டு முகாமில் இருந்த செந்தூரன் மீது ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு கேரளாவில் கைது செய்யப்பட்டார். ஆனால் சொந்த ஜாமீனில் வெளியே வந்த அவரை, தற்போது செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்து வைத்துள்ளனர்.
2 அரசு மருத்துவர்கள் மூலம் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ததில், 23 பேருக்கு மனஅழுத்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையிலும், எந்த செய்தியும் வெளியே வரவில்லை.
செந்தூரன் 26 நாட்களாக உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார். இதில் 12 நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடல்நிலை எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். எனவே செந்தூரனின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை மதிமுகவின் போராட்டம் தொடரும்.
குன்னூரில் உள்ள வெலிங்டனில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு கடந்த மே 17ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதும், மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜூ, ராணுவ பயிற்சி அளிப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனை என்று தெரிவித்துள்ளார்.
இது அவரது சொந்த கருத்து அல்ல. காங்கிரஸ் தலைவி சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் குரல்கள் ஆகும். இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் சிங்கள ராணுவ வீரர்களை உடனடியாக நாட்டை வி்ட்டு வெளியேற்ற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications