தனிப்பட்ட முறையில் புலிகளை திமுக ஆதரிக்கவில்லை- அவர்களும் எங்களை ஆதரிக்கவில்லை: அன்பழகன்

கோவையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது:
ஜெ.க்கு கேள்வி!
இலங்கையில் போர் நடைபெற்ற போது, பொதுமக்கள் பலபேர் இந்தப் போரில் கொல்லப்படுகிறார்கள் என்று செய்தி வந்தது. அப்போது மக்கள் அழிக்கப்படுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கூக்குரல் எழுப்புகிறார்கள். அப்போது இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா எந்த நாட்டிலே போர் நடைபெறும்போதும் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் என்று சொன்னவர், இப்போது ஏதோ இந்தியாவில் இரு சிங்கள வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதாகவும், அந்த இரண்டு பேருக்கு பயிற்சி கொடுப்பதை நிறுத்தவில்லை என்றும் அறிக்கை கொடுக்கிறார். தமிழன் மொத்தமாக கொல்லப்படுகிறபோது, அது போரில் நடப்பது சகஜம் என்று சொன்னவர் ஜெயலலிதா.
புலிகளை ஆதரிக்கலை
இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால் ஒரு பிரச்சனை வந்தபோது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக திமுக இருக்கிறது என்றார்கள். நாம் தனிப்பட்ட முறையிலே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இல்லை. நாம் கொடுத்த 50,000 ரூபாய் பணத்தைக்கூட அவர்கள் வாங்கிக் கொள்ள மறுத்தார்கள். எம்ஜிஆரிடம் 4 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டார்கள். அப்படி விடுதலைப் புலிகளுக்கு நம்மிடத்திலே சின்ன மாறுபாடு.
சட்டமன்றத்திலே ஜெயலலிதா சொல்கிறார் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். அந்த துரோகிகளுக்கு இந்தியாவிலே இடம் இருக்கக் கூடாது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து கொண்டு வந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என்றார்.
வைகோ, நெடுமாறனுக்கு கேள்வி
ஆனால் இப்பொழுது அவெர்களெல்லாம் வைகோவிற்கு வேண்டியவர்கள். கலைஞர் டெசோ என்று சொல்லி ஈழத்தமிழர்களின் பிரச்சினையை குளிர் காய்வதற்கு பயன்படுத்துகிறார் என்று சொல்கிறார்களே. நீங்கள் செய்ததையெல்லாம் பட்டியல் போட்டு காட்ட முடியுமா? கலைஞர் ஒன்றும் செய்யவில்லை என்கிறாரே நெடுமாறன், நீங்கள் என்ன செய்தீர்கள். தினமணியில் ஒரு அரைப்பக்கம் கிடைத்தால் அறிக்கை விடுவீர்கள். அந்த அறிக்கையோடு உங்கள் வேலை முடிந்தது. பொதுமக்களின் உணர்வை திரட்டக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உண்டா. கலைஞரைத் தவிர இதற்கான பணிகளை செய்யக்கூடிய ஆற்றல் இந்த நாட்டில் எவருக்கும் கிடையாது.
இலங்கை அரசாங்கத்தின் மீது, ராஜபக்சேயின் மீது குற்றம் சாட்டுகிற அளவுக்கு ஒரு நிலைமை இருக்கிறபோது அந்த குற்றச்சாட்டை நிலைநாட்டி அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு தூண்டுதலாக இந்திய அரசு இருக்க வேண்டும். இந்திய அரசாங்கத்தால் தீர்மானம் கொடுக்க வேண்டும் என்று கலைஞர்தான் டெசோ சார்பாக முன்கூட்டியே வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் ஐக்கிய நாடுகள் மன்றத்திலே கொண்டுவரப்பட்ட அந்த தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிக்கிறது என்று சொல்லி ஆதரித்து இருக்கிறது.
தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்திலே இருந்து கலைஞர் குரல் எழுப்பினால் தவிர வேறு யார் தூண்ட முடியும். டெல்லியிலே ஆட்சியிலே நாங்கள் இருப்பதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அது வேறு. நாங்கள் ஆட்சியிலே இருக்கக்கூடாது என்று வைகோவோ - மற்றவர்களோ எண்ணக்கூடும். ஆனால் நாங்கள் ஆட்சியிலே இருந்ததால்தான் மத்திய அரசை தூண்ட முடிகிறது. அந்த தூண்டுதல் ஆற்றல் எங்களுக்குத்தான் இருக்கிறது. உங்களுக்கு இல்லை, அந்த தூண்டுதலுக்குத்தான் இந்த டெசோ மாநாடு. இந்த டெசோ மாநாட்டிலே போடப்பட்ட தீர்மானங்களையெல்லாம் ஒருமுறை படித்துப்பார்த்தால் எந்த நிலைமையிலே தமிழர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும்.
இப்படிப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதை செயல்படுத்துவதற்கு நம்முடைய ஐக்கிய நாடுகள் போய் அந்த மனித உரிமைகளை காப்பாற்றக்கூடிய அந்த அமைப்பு இடத்திலே வாதாட வேண்டும். அப்படி செய்தவற்கு டெல்லியிலே நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருக்கிற டி.ஆர்.பாலு அவர்களும், கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இன்றும் சிலரும் அங்கே ஜெனிவாவிலே அந்த அமைப்பு இருக்கிற இடத்திலே சென்று நம்முடைய தீர்மானங்களை கொடுத்து தொடர்ந்து இதற்கு உரிய கடைமையை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறார்கள். இந்திய அரசாங்கமும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும் எறு நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
டெசோ மாநாடு ஈழத் தமிழனை காப்பாற்ற நாம் செய்யக்கூடிய ஒரே காரியம். அதை மனதிலே வைத்து இதையெல்லாம் செய்தவற்கு ஒற்றுமை வேண்டும். கலைஞர் தலைமையிலே ஒன்றுபடுங்கள், செயல்படுங்கள் என்று வேண்டுகிறேன் என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications