பெங்களூரில் சிக்கிய தீவிரவாதிகளின் குருவுக்கு போலீசார் வலை
பெங்களூர்: பெங்களூர், ஹூப்ளி மற்றும் ஹைதராபாத்தில் கைதான தீவிரவாதிகளின் தலைவனான ஜகீர்(எ) உஸ்தாதை போலீசார் தேடி வருகின்றனர். ஜகீரை அவனது ஆட்கள் குரு என்றே அழைத்து வந்துள்ளனர்.
நாட்டில் பல இடங்களில் நாசவேலையில் ஈடுபட தீவிரதவாத அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து கடந்த 3 மாதங்களாக உளவுத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி பெங்களூரில் 6 பேரும், ஹூப்ளியி்ல் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நேற்று மாலை பெங்களூரில் டாக்டர் நயீம் சித்திக் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன் மற்றும் ரூ.10,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு பணம், போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்து வந்தவர் சித்திக் என்று போலீசார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் சங் பரிவார் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் 2 பத்திரிக்கையாளர்களை தாக்க திட்டமிட்டிருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. கைதானவர்களில் பெங்களூரைச் சேர்ந்த பிரபல ஆங்கில நாளிதழின் செய்தியாளர் முத்தி உர் ரஹ்மான் சித்திக்கும் அடக்கம்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு லஷ்கர் ஏ தொய்பா, ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமி போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்களுக்கெல்லாம் தலைவனாக செயல்பட்டு நாச வேலைத் திட்டங்களை கண்காணித்து வந்த வடக்கு பெங்களூரில் உள்ள ஜே.சி. நகரைச் சேர்ந்த ஜகீர்(எ) உஸ்தாதை போலீசார் தேடி வருகின்றனர். அவனை அவனது கூட்டாளிகள் குரு என்றே அழைப்பார்களாம். சவூதி அரேபியாவில் உள்ள தீவிரவாதியின் உதவியோடு பெங்களூரில் நாச வேலைகளைச் செய்ய குரு திட்டமிட்டிருந்தான்.
சவூதி தீவிரவாதியின் உத்தரிவின்பேரில் குரு வாலிபர்கள் குழுவை உருவாக்கி நாச வேலைகள் நடத்த பல மாதங்களாக திட்டமிட்டிருந்தான். ஆனால் அவற்றை செயல்படுத்தும் முன்பு குழுவினர் போலீசில் சிக்கிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications