மக்கள் பணியாற்றினால் பதவி உங்களை தானாக தேடி வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
வேலூர்: மக்கள் பணியை செய்து கொண்டிருந்தால் பதவி, பொறுப்பு போன்றவை உங்களை தேடி வரும். நீங்கள் அதை தேடி போக வேண்டியதில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டம் நேற்று துவங்கியது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி பயிற்சி பாசறையை துவங்கி வைத்தார். மேலும் வேலூர் மாநகரின் 8 பகுதிகளுக்கான திமுக இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது திமுக தொண்டர்கள் பதவியை எதிர்பார்த்து செயலாற்ற கூடாது. மக்கள் பணியாற்றினால் பதவியும், பொறுப்புகளும் தானாக தேடி வரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
மக்கள் பணியாற்றினால் பதவியும் மற்றும் பொறுப்புகளும் தானாகவே உங்களை தேடி வரும். எனவே யாரும் பதவி மற்றும் பொறுப்புகளை தேடி செல்ல வேண்டாம். நம்மை தேடி பதவிகள்வர வேண்டும். அதற்காக கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டும். பதவி இன்று வரும், நாளை போகும். ஆனால் பொறுப்புகள் அப்படி அல்ல.
ஆட்சியில் இல்லாத போதும், எழுச்சியுடன் காணப்படும் ஒரே கட்சி திமுக தான். கடந்த 2007ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வுகளில் மாநிலத்தில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி வருகிறோம்.
மேலும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகளை நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இந்த முறையில் மாணவர்களுக்கு மட்டும் இதுவரை ரூ.2.17 கோடி மதிப்பில் பரிசுகள் வழங்கி உள்ளோம்.
இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் திமுக உழைத்து வருகிறது. வேலூரில் நடைபெறும் பாசாறை கூட்டத்தை பார்த்தால், மற்ற மாவட்டங்களை விட இங்கு அதிகமாக தொண்டர்கள் கூடியிருப்பது போல உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications