சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: விசாரணைக் கமிஷன் அமைக்க கி.வீரமணி கோரிக்கை
சென்னை: சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து, சுமார் 50 பேர்களுக்கு மேல் பலி கொண்டது என்பதை அறிய மிகுந்த வேதனையும், துயரமும் அடைகிறோம். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
இதில் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையும் 50த் தாண்டுவதாக அமைகிறது. இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு மிகப் பெரும் கோரத் தீ விபத்தாக இது அமைந்துள்ளது மிகவும் அதிர்ச்சியைத் தருவதாகும்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், குடும்பத்தினருக்கும் தமிழக அரசு நட்ட ஈடு- இழப்பீடு தர வேண்டும் என்பது அவசியம் என்றும், அதைவிட முக்கியம்-இதன் மூலகாரணத்தைத் தக்க ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து அறிந்து, நிரந்தரமாக இனிமேல் அத்தகைய விபத்துகள் தொடர முடியாத அளவுக்குப் போதிய பாதுகாப்புகளைச் செய்ய, அனைத்துப் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் ஆணை பிறப்பிப்பதும் அவசர அவசியமாகும்.
மறைந்த அத்தொழிலாளர்களின் பிள்ளைகள், மகளிர் படிக்கவும், வேலை பார்த்து தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் போதிய வசதி வாய்ப்புகளை அக்குடும்பத்தினருக்கு உருவாக்கித் தருவது மிகவும் இன்றியமையாதது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications