தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாள்- வன்முறையை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் நடவடிக்கை!
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் 11-ந் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி அங்கு பட்டாசுகள் வெடிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருக்கிறது.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11-ந் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் அஞ்சலி செலுத்த வருவோரின் பாதுகாப்பு நலன் கருதி தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்துள்ளது.
அதன்படி, தியாகி இமானுவேல் சேகரன் நினைவு இல்லம் வரும் கார், வேன், பஸ் உட்பட மூடிய வாகனங்களில் மட்டும் செல்ல வேண்டும். வாகனங்களில் மேற்கூரைகளில் பயணம் செய்யக் கூடாது. வாகனங்களில் ஆயுதங்கள், பட்டாசுகள், தடிகள், கற்கள், ஒலி பெருக்கிகள் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து வழித்தடங்களில் கண்டிப்பாக வெடி போடுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் வரும் போது மற்றவர்கள் மனம் புண்படும் வகையில், வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களோ, துண்டுப் பிரசுரங்களோ, படங்களோ ஒட்டி வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த முறை நடைபெற்ற நினைவு தினத்தின் போது, பரமக்குடியில் பெரும் கலவரம் வெடித்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்தது. இதனால் இம் முறை மாவட்ட நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதாக கூறப்படுகின்றது. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications