குமரியில் தடையை மீறி மவுன ஊர்வலம்: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 13,000 பேர் மீது வழக்கு
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று தடையை மீறி மவுன ஊர்வலம் சென்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 13,000 போர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் நித்திரவிளையைச் சேர்ந்த எட்வின்ராஜ்(28) என்பவர் ஜெபக்கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் எட்வின்ராஜ் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று கறுப்புக் கொடி ஏற்றி ஆராதனை செய்யப்பட்டது. மேலும் மாலையில் நாகர்கோவில், நித்திரவிளை, மார்த்தாண்டம், தக்கலை, அருமனை, கருங்கல், குலசேகரம், புத்தளம் ஆகிய இடங்களில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது.
நித்திரவிளையில் நடந்த ஊர்வலத்தில் ஹெலன் டேவிட்சன் எம்.பி., ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ, மார்த்தாண்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ், தக்கலையில் எம்.எல்.ஏ.புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெஜினால்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கறுப்பு பேட்ஜ் அணிந்து, கையில் கறுப்புக் கொடி ஏந்தி ஊர்வலத்தில் சென்றனர்.
குமரி மாவட்டத்தில் தற்போது காவல்துறை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் போலீசாரின் தடை உத்தரவு நடைமுறையில் இருப்பதால் கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் மவுன ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தடையை மீறி ஊர்வலம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மார்த்தாண்டம் திருத்துவபுரத்தில் நடந்த ஊர்வலத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி உள்பட 3,500 பேர் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதே போன்று நித்திரவிளையில் தடையை மீறி ஊர்வலம் சென்ற ஹெலன் டேவிட்சன் எம்.பி., ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ. உள்பட 3,000 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் தக்கலையில் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன் உள்பட 3,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் ஊர்வலமாகச் சென்ற 1,000 பேர் மீதும், புத்தளத்தில் 700 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர குலசேகரம், அருமனை, கருங்கல் பகுதிகளில் ஊர்வலம் நடத்தியவர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
8 இடங்களில் நடத்தப்பட்ட மவுன ஊர்வலத்தில் பங்கேற்றது தொடர்பாக 13,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications