அறவழியில் போராடிய நிராயுதபாணிகள் மீது தாக்குதல் நடத்துவதா?: தலைமறைவான உதயகுமார் கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை அருகே கூடியிருந்த பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தியது. அப்போது போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் உள்ளிட்டோர் பைபர் படலில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
கூடங்குளம் கடற்கரையில் நிராயுதபாணிகளான கூடியிருந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கண்ணீர்புகை குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதன் மூலம் தமது பாசிச முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
நான் தற்போது இடிந்தகரையில்தான் இருக்கிறேன். இருப்பினும் சற்று தள்ளி இருப்பதால் போலீசாரின் தாக்குதலில் எத்தனை பேர் படுகாயமடைந்தனர்? கைது செய்யப்பட்டனர் என்ற விவரம் தெரியவில்லை. கடலுக்குள் போனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
காவல்துறையினர் எங்களுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. எங்களைத் தேடித்தான் பொதுமக்களை அச்சுறுத்தியிருக்கின்றனர்.
நாங்கள் அணு உலைக்கோ அல்லது அணு உலைக்கு சென்ற ஊழியர்களை தடுக்கவோ இல்லை. அமைதியான அறவழியில் போராடினோம். எங்கள் போராட்டம் காந்திய வழியில் தொடரும். இந்தியா முழுவதும் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடையும் என்றார் அவர்.
தொடர் தலைமறைவு?
சுப. உதயகுமார் தாம் இடிந்தகரைக்கு அருகே இருப்பதாகக் கூறினாலும் அவர் கடலுக்குள் தப்பிச் சென்றிருக்கவே கூடும் எனக் கூறப்படுகிறது. இடிந்தகரை கிராமம் தற்போது காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரை கைது செய்வதற்காகவே கடந்த சில நாட்களாக அவரது உறவினர்களை காவல்துறை கண்காணித்து வருகிறது. தற்போதைய சூழலில் சுப. உதயகுமார் இன்னும் சில காலம் தலைமறைவாக வாழக் கூடிய நிலை இருப்பதாகவே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications