கூடங்குளம் பிரச்சனை: தயார் நிலையில் நெல்லை அரசு மருத்துவமனை
நெல்லை: கூடங்குளத்தில் கண்ணீர்ப் புகை குண்டு வீசியதைத் தொடர்ந்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதலில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நெல்லையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழு கூடங்குளம் சென்றது. இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் நேற்று பகலில் போராட்டக்குழுவினரை கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகை குண்டை வீசினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்தனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து டாக்டர்களை உடனடியாக அனுப்புமாறு மாவட்ட கலெக்டர் செல்வராஜ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை டீன் ஏற்பாட்டில் குழந்தைகள் நல டாக்டர்கள் உள்பட 6 டாக்டர்கள், நர்சுகள், அவசர சிகிச்சைப் பிரிவு உதவியாளர்கள், ரத்த சேமிப்பு பிரிவினர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களுடன் ஏராளமான மருந்து பொருட்கள் அடங்கிய வாகனமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் பிரச்சனை காரணமாக யாராவது காயம் அடைந்து வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அனைத்து பிரிவு ஊழியர்களும் சிறப்பு விடுப்பு எதுவும பெறாமல் தயார் நிலையில் பணியில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications