பஸ் ஸ்டிரைக்.. பெங்களூரில் மக்கள் பெரும்பாடு; டூ வீலர்களால் நிரம்பி வழியும் நகரம்!

இந்தப் போராட்டத்தால் பெங்களூரில் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
கர்நாடக அரசு பஸ் போக்குவரத்து கழகத்துக்கு (கே.எஸ்.ஆர்.டி.சி) கர்நாடகத்தில் 4 மண்டலங்கள் இயங்கி வருகின்றன. சுமார் 1.8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊதிய உயர்வு, சலுகை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இவர்கள் தொடங்கியுள்ளனர்.
இதில் பெங்களூர் நகரப் பேருந்துக் கழகமான பி.எம்.டி.சி. போக்குவரத்து கழக ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளதால், இன்று காலை முதல் நகரில் ஒரு அரசுப் பேருந்து கூட இயங்கவில்லை.
இதனால் பஸ் நிலையங்கள், பஸ் ஸ்டாப்புகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இன்று காலை இந்த ஸ்டிரைக் குறித்த விவரம் தெரியாமல் வேலைக்குக் கிளம்பி வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
பஸ் ஸ்டிரைக் என்றவுடனேயே ஆட்டோக்களின் கட்டணத்தையும் 2 முதல் 3 மடங்காக உயர்த்திவிட்டனர் டிரைவர்கள். இதனால் பஸ்சும் இல்லாமல், ஆட்டோவுக்கும் 'அழுக' முடியாமல் மக்கள் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
பலர் நடை பயணமாக செல்வதையும் காண முடிந்தது. பெட்ரோல் விலைக்குப் பயந்து வீட்டில் பூட்டி வைத்த டூ விலர்களையும் ஏராளமான மக்கள் வெளியில் எடுத்துள்ளனர். இதனால் நகரம் முழுக்கவும் பெரும் போக்குவரத்து நெரிசலும் நிலவுகிறது.
பல சைக்கிள்களும் ஊரைப் பார்க்க வீட்டை விட்டு வெளியே கிளம்பியுள்ளன.
பஸ் ஸ்டிரைக்கினால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளில் ஏராளமானோர் இன்று கல்வி நிலையங்களுக்குச் செல்லவில்லை. அலுவலகங்களிலும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இதற்கியடையே வேலைநிறுத்தம் நடைபெற்றால் அதன்மூலம் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மஞ்சுநாத பிரசாத் தெரிவித்துள்ளார். அது என்ன மாற்று ஏற்பாடு என்பது அவருக்கே கூட தெரியுமா என்பது தெரியவில்லை.
இதற்கிடையே, வேலைநிறுத்தத்தை கைவிடும்படி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் மற்றும் துணை முதல்வரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான அசோக் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவர்கள் சொல்வதை இவர்களது பாஜக கட்சி எம்எல்ஏக்களே கேட்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications