கூடங்குளம் தடியடி: 48 கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் வேலை நிறுத்தம்
குமரி: கூடங்குளத்தில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து 48 கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் குமரி மாவட்டத்தில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இப்பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று மீனவர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்களை தங்குதலமாக கொண்டு கடலுக்கு செல்லும் 2,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் எதுவும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதுபோல் 10,000க்கும் மேற்பட்ட வள்ளங்கள், கட்டு மரங்களும் கடலுக்கு செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று கூடங்குளம் தடியடிக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கோவளம், கீழமணக்குடி, மேல்மணக்குடி, கேசவன்புத்தன்துறை, ராஜக்காமங்கலம்துறை, குளச்சல், வாணிக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இன்று கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. மீனவர்களின் போராட்டம் காரணமாக கடற்கரை கிராமங்கள் கடந்த 2 நாட்களாகவே பதட்டமாக காணப்பட்டது. இதையடுத்து முக்கியமான இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடந்தது. மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications