அட ஏங்க நீங்க வேற, நான்தாங்க ஆண்களிடம் ஏமாந்து விட்டேன்... ஷானாஸ்
50 பேரை மோசடியாக திருமணம் செய்து பணம், பொருளை சுட்டுக் கொண்டு ஓடி விட்டார் என்பது ஷானாஸ் மீது சில ஆண்கள் கொடுத்த புகார். இந்தப் புகார்களைப் பெற்ற சென்னை போலீஸார் ஷானாஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தத் தேடுதலில் அவர் பெங்களூர் பஸ் ஸ்டாண்ட் பக்கம் வைத்துப் பிடிபட்டார்.
அவரை சென்னைக்குக் கொண்டு வந்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.
விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த சித்திக், சினிமா கலை இயக்குநர் ராகுல், புளியந்தோப்பு பிரசன்னா உள்ளிட்ட 4 பேரை மட்டுமே தான் மணந்ததாக ஷானாஸ் கூறியிருந்தார். அதில் தற்போது புளியந்தோப்பு பிரசன்னாவின் குழந்தையை அவர் வயிற்றில் சுமப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு நாள் காவலில் ஷானாஸை எடுத்துப் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், நான் எந்த ஆணையும் ஏமாற்றவில்லை. ஆனால் நான்தான் ஆண்களை நம்பி ஏமாந்து போய் நிற்கிறேன். என்னை நம்ப வைத்து அத்தனை பேரும் ஏமாற்றி விட்டனர் என்று கூறியுள்ளாராம் ஷானாஸ்.
இதற்கிடையே, ஷானாஸ் வைத்திருந்த ஆக்டிவா ஸ்கூட்டரை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆக்டிவாவில் ஏறித்தான் சென்னையைச் சுற்றி வந்துள்ளாராம் ஷானாஸ்.
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்ததும் தன்னை நம்ப வைத்து மோசடி செய்த ஆண்கள் மீது புகார் கொடுக்க ஷானாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தனது குழந்தைக்கு யார் தந்தை என்பது தொடர்பாகவும் அவர் ஒரு வழக்குப் பதிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.