ஜட்டிக்குள் தங்கக் கட்டிகள் .... 7 பேர் சிக்கினர்.. சென்னை புள்ளிக்கு வலை வீச்சு
சென்னை: ஜட்டிக்குள் மறைத்து வைத்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த 7 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்கு கொழும்பிலிருந்து வந்த விமானத்தில், போலீஸார் ஒரு பயணி மீது சந்தேகப்பட்டு சோதனையிட்டனர். அந்த பயணியின் பெயர் அகமது மொய்தீன். 35 வயதான அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவரை போலீஸார் விசாரித்தபோது சுங்கத்துறையினரின் சந்தேகம் வலுத்தது.
அவரை தனி அறைக்குக் கொண்டு சென்று சோதனையிட்டனர். ஆனால் ஒன்றும் சிக்கவில்லை. இதையடுத்து உடைகளைக் கழற்றி சோதனையிட்டனர். அப்போது ஜட்டிக்குள் அவர் ஒரு பொட்டலத்தை வைத்திருந்தார். அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் 242 கிராம் தங்கக் கட்டிகள் இருந்தன. இதையடுத்து அதிகாரிகள் அதைக் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ. 8 லட்சமாகும்.
இதையடுத்து கொழும்பிலிருந்து பகலில் வந்த இன்னொரு விமானத்திலும் 6 பேர் சிக்கினர். அவர்கள் ஒரத்தநாட்டைச் சேர்ந்த தமிழ்செல்வன் சிவக்குமார், இலங்கையை சேர்ந்த பொன்னுசாமி, அப்பாதுரை, யோகேஸ்வரன், கந்தன், ரத்தினசாமி ஆகியோர் ஆவர்.
இவர்களும் ஜட்டிக்குள் தங்கத்தை மறைத்து வைத்துக் கொண்டு வந்தனர். அனைவரிடமிருந்தும் 900 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்த மதிப்பு ரூ. 30 லட்சம்.
மண்ணடியைச் சேர்ந்த ஒருவருக்கு இதைக் கொண்டு வந்ததாக அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.இதையடுத்து அந்த மண்ணடி நபரைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர். விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.