கட்டணத்தை உயர்த்தும் ஷேர் ஆட்டோ, ஸ்கூல் வேன் உரிமையாளர்கள்

டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரித்து விட்டது மத்திய அரசு. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால் அடுத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயரப் போகிறது. லாரிகள், வேன்கள் உள்ளிட்டவற்றின் வாடகைக் கட்டணம் மிகக் கடுமையாக உயரப் போகிறது. மேலும் ஷேர் ஆட்டோக்கள், பள்ளிக்கூட வேன்கள் ஆகிய டீசலில் ஓடும் வாகனங்களும் கடும் பாதிப்பை சந்திக்கப் போகின்றன.
இந்த நிலையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் சிலர் கூறுகையில், ஏற்கனவே நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையில்தான் ஆட்டோ ஓட்டி வருகிறோம். சிங்கிள் ஆட்டோ ஓட்டுநர்களுடன் கடுமையாக சண்டை போட்டபடிதான் ஒவ்வொரு நாளையும் நாங்கள் தள்ளி வருகிறோம். இந்த நிலையில் அரசு டீசல் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதை நிச்சயம் எங்களால் தாங்க முடியாது. கண்டிப்பாக நாங்கள் கட்டணத்தை உயர்த்தியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் பிழைக்க முடியாது என்றார்கள் குமுறலுடன்.
பள்ளிக்கூடத்திற்கு வேன் வாடகைக்கு விட்டு வரும் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், நிச்சயமாக கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய நிலையில் உள்ளோம் சார். வேறு வழியில்லை. ஏற்கனவே நாங்கள் குறைந்த கட்டணத்தில்தான் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று வருகிறோம்.
இடையில் ஜியோன் பள்ளி விவகாரத்தைத் தொடர்ந்து போலீஸாரின் கெடுபிடி மிக மோசமாக உள்ளது. கண்ட இடத்திலும் வண்டியை நிறுத்தி அது சரியில்லை, இது சரியில்லை என்று அபராதம் என்று கூறி பணம் வசூலிக்கிறார்கள். இந்த நிலையில் டீசல் விலை உயர்வால் நாங்கள் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications