சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டால் வேளாண் துறைக்கு பாதிப்பு: அருண் ஜேட்லி

இது தொடர்பாக நிதிசென்ட்ரல் இணையத்தளத்தில் ஜேட்லி எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கோரி வந்தனர். ஆனால் இந்தியா இதற்கு வெளிப்படையாகவே கடுமையாக எதிர்த்து வந்தது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள் இறங்குவதன் மூலம் அன்றாட தேவைகளுக்கான பொருள் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்படும் என்பது பொதுக் கருத்தாக இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான தருணம் இன்னும் உருவாகவில்லை என்பதே நிதர்சனம். அண்மைக்காலமாகத்தான் சிறிய அளவில் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லரை வர்த்தகத்துறை என்பது இந்தியாவில் வளர்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு இந்தத் துறையில் கணிசமான முதலீடும் செய்யப்பட்டு வருகிறது. இப்படியான ஒரு இளம்பிராய சூழலில் அன்னிய முதலீட்டை இத்துறையில் அனுமதிப்பது என்பது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தக் கூடும்.
அன்னிய முதலீட்டை சில்லரை வர்த்தகத்தில் அனுமதிப்பதன் மூலம் முதலில் உள்நாட்டு உற்பத்தித் துறையில் கடுமையாக பாதிப்புகள் ஏற்படும். உள்நாட்டு சில்லரை வர்த்தகத்தர்கள், உள்நாட்டிலிருந்துதான் கொள்முதல் செய்து கொள்கின்றனர். சர்வதேச சில்லரை வர்த்தக நிறுவனங்களோ தங்களுக்கு எங்கு மிகக் குறைவான விலையில் கிடைக்கிறதோ அங்குதான் வாங்குவதை கொள்கையாக வைத்திருக்கின்றனர். இந்தியாவை விட சீனாவில் துணிகள், ஷூக்கள் போன்றவை மலிவாகக் கிடைக்குமேயானால் அங்கிருந்துதான் வாங்குவர். அவர்களுக்கு இந்திய உற்பத்தித் துறையைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. இதனால் உள்நாட்டு உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் என்பது கணிசமாகக் குறைய நேரிடும்.
இதனால் நாட்டின் உற்பத்தித் துறையில் சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படும். அதாவது குறைந்த விலையிலான பொருட்களை உற்பத்தி செய்தாக வேண்டிய நிலை உருவாகும். குறைந்த விலையில் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புக்கு நாம் மாறும் நிலையில் சர்வதேச சில்லரை வர்த்தக நிறுவனங்கள் நமது பொருட்களை வாங்குமா? என்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் அதாவது நமது உற்பத்தித் துறையானது பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்களைச் சார்ந்துதான் இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.
இந்தியப் பொருளாதாரம் என்பது சேவை துறையோடு தொடர்புடையது. இந்தியாவைப் பொறுத்தவரையில் விவசாயமும் சில்லரை வர்த்தகமும்தான் பெருமளவு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடியது. இந்த நிலைமையில் பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்குமா? அல்லது ஏற்கெனவே கிடைத்துக் கொண்டிருக்கும் வேலைவாய்ப்புகளுக்கு ஆப்பு அடிக்குமா? மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்குமேயானால் ஒழுங்கமைக்கப்பட்ட உள்நாட்டு சில்லரை வர்த்தகத்திலும் சிறு சில்லரை வர்த்தகத்திலும் இது எதிரொலிக்கும். அப்படியான நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்கெனவே சில்லரை வர்த்தகத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை கபளீகரம் செய்துவிட்டு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்.
இதுமட்டுமின்றி நுகர்வோரின் விருப்பத்துக்கேற்ப பொருட்களை வாங்கும் நிலைமை போய் பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் கொடுக்கும் பொருட்களை வாங்க வேண்டிய நிலைமையும் உருவாகும். முதலில் குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கும் இந்த நிறுவனங்கள், உள்நாட்டு போட்டியாளர்களை வெளியேற்றிவிடுவதுடன் நுகர்வோர்களையும் தங்களது வருவாய் தரக்கூடிய பொருட்களை வாங்க வைக்கும் நிலைமையை உருவாக்கிவிடுவர்.
வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் சீனாவிடமிருந்து பொருட்களை வாங்கி சீனாவிலும் வெளிநாட்டு சந்தைகளிலும் விற்கின்றனர். அனைத்து நாடுகளிலும் தங்களது பொருட்கள் விற்பனை செய்யப்படுவதன் மூலம் சீனாவுக்கு பெரும் ஆதாயம் கிடைக்கிறது. ஆனால் இன்னொன்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா முழுவதும் உணவுப் பொருட்களை இத்தகைய சங்கிலித் தொடர் நிறுவனங்களில் தேக்கி வைக்கப்பதனால் நமது நாட்டின் உணவுப் பொருட்கள் தேவையானது வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு செல்வதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
இது விவசாயத்துறையிலும் எதிரொலிக்கவே செய்யும். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது மண்டியிடச் செய்தல் என்பது மட்டுமின்றி அரசாங்கம் மேற்கொள்ளக் கூடிய பொருளாதார சீர்திருத்தங்களையும் கைவிடச் செய்ய வேண்டியதிருக்கும். எங்களைப் பொறுத்தவரையில் அன்னிய முதலீடு என்ற கருத்தையோ சீர்திருத்த செயல்திட்டங்களையோ எதிர்க்கவில்லை. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கக் கூடிய மாற்றங்களை சீர்திருத்தம் என்று கூறுகின்றனர். என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு குறித்த ஜேட்லியின் கட்டுரை












Click it and Unblock the Notifications