நிலக்கரி சுரங்க வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்- அதிரடி கேள்விகளுக்கு பதிலளிக்க உத்
டெல்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து பல்வேறு கேள்விகளையும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் குறித்து எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் பொது நல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,சட்டத்துக்குப் புறம்பாகவும் தன்னிச்சையாகவும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் நடைபெற்றுள்ளன. இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு முறையாக பின்பற்றவில்லை. இதனால் நாட்டுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பு நேர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இம் மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஏ.ஆர்.தவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரோஹின்டன் நாரிமன் ஆஜராகி வாதாடுகையில், சி.ஏ.ஜி. அறிக்கை நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் இதன் அடிப்படையிலான வழக்கை விசாரிக்கக் கூடாது. மேலும், இந்த விவகாரம் குறித்து, முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு செப்டம்பர் 20-ம் தேதி விசாரிக்க இருக்கிறது. ஒதுக்கீடு விவகாரத்தில் குற்றம் நடைபெற்றுள்ளதா என்பது பற்றியும் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது. சி.ஏ.ஜி. அறிக்கையின் அடிப்படையில் தற்போது எழுந்துள்ள மனு அவசரப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆனால், உச்ச நீதிமன்றம், சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்தை நிராகரித்தது. அரசியல் சாசன அமைப்பான சி.ஏ.ஜி.யின் அறிக்கை நம்பத் தகுந்ததே எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அறிக்கையின் அடிப்படையில் மனுவை விசாரிக்கலாம் எனத் தெரிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி
மேலும். "ஒதுக்கீடுகளில் நடைபெற்ற சட்ட மீறல்களை இந்தப் பொது நல மனு சுட்டிக் காட்டுகிறது. ஒதுக்கீட்டில் விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்பட்டனவா என்பதை மட்டுமே அறிய முயல்கிறோம். சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை பற்றி இந்தக் கட்டத்தில் ஆலோசிக்கவில்லை. சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கை விவரங்களை நாடாளுமன்றம் அல்லது பொதுக் கணக்கு குழு பரிசீலனை செய்யலாம். அந்த விசாரணையின் தன்மை வேறு. நாடாளுமன்ற உரிமைகளில் உச்ச நீதிமன்றம் குறுக்கிட விரும்பவில்லை. இந்தப் பொதுநல மனு முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 2004-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஏல முறையில் நிலக்கரி சுரங்கங்கள் அளிக்கப்பட்டனவா என்பதுதான் அது. அவற்றுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்தாக வேண்டும். இந்த விவகாரம், நாட்டின் வளம் குறித்த பிரச்னை.சட்டத்துக்குப் புறம்பாக ஒதுக்கீடு பெற்றவர்கள் எனக் கூறப்படுபவர்களில் அமைச்சர்கள் பெயரும் அவர்களுடைய உறவினர்கள் பெயர்களும் எவ்வாறு இடம்பெற்றன? நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்குவதில் பல விரிவான அம்சங்கள் உள்ளன. ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு உருவாக்கிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? நியாயமற்ற வகையில் தனியார் பலன் அடைவதைத் தடுக்க விதிமுறைகளில்
போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருந்தனவா? விதிமுறைகள் மிகவும் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டனவா? 2004-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஏல முறையைப் பின்பற்றாமல் இருந்ததற்கு முட்டுக்கட்டைகள் இருந்தனவா? ஒதுக்கீடு பெற்றவர்கள், விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றவில்லை என்றாலோ அல்லது ஒப்பந்தத்தை மீறினாலோ அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டது? இவை பற்றி மத்திய நிலக்கரி அமைச்சகச் செயலர் எட்டு வாரங்களுக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications