சிலிண்டர் மானிய வெட்டு- மக்களுக்கு செய்யும் துரோகம்: மாதர் சங்கம் கண்டனம்!
சென்னை: வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களுக்கான மானியத்தை மத்திய அரசு குறைத்த நடவடிக்கை, மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்று ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் என்.அமிர்தம், பொதுச் செயலாளர் சுகந்தி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு டீசல் விலையை ஏற்றியதோடு, சமையல் சிலிண்டருக்கும் கட்டுப்பாட்டை கொண்டு வந்து, மீண்டும் ஒரு தாக்குதலை தொடுத்துள்ளது.
பெட்ரோல் விலையை அடிக்கடி உயர்த்தி வந்த அரசு கடந்த 13ம் தேதி இரவு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியுள்ளது. மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படவில்லை என்று மார்தட்டி கொள்கிறது.
ஆனால் குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 14.2 எடையுள்ள வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 6 சிலிண்டருக்கு மேல் தேவைப்படுபவர்கள் சந்தை விலையில் தான் இனி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மானியம் வெட்டப்படுவதால் சிலிண்டர் விலை ரூ.700க்கு மேல் உயரும் வாய்ப்புள்ளது. இது மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. எப்போதும் போல் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது. இந்த கோரிக்கையை முன்வைத்து அனைத்து மாவட்டக் குழுக்களும் நூதன முறையில் கண்டன போராட்டம் நடத்த உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications