குவாரிக்காக தனியார் சொத்தை மிரட்டி வாங்கியதாக பி.ஆர்.பழனிச்சாமி மீது மேலும் ஒரு புகார்!
கரூர்: கரூரில் தனியார் ஒருவருக்கு சொந்தமான சொத்தை கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி மிரட்டி எழுதி வாங்கி கொண்டதாக மதுரை எஸ்.பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், தோகைமலை கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவர் தனது சொத்துக்களை மீட்டுத் தருமாறு மதுரை கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கும், எனது மனைவிக்கும் சொந்தமான சொத்துகள், கரூர் மாவட்டம், நாகனுர் கிராமத்தில் உள்ளது. எனக்கும், மனைவிக்கும் சொந்தமான குவாரி உட்பட மொத்தம் 12 ஏக்கர் 42 சென்ட் பகுதியை பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி, வண்டல் கரட்டுப்பட்டியில் உள்ள அவரது அக்கா மகன் காந்தி, சண்முகம் ஆகியோர் அடியாட்களுடன் வந்து என்னையும், எனது குடும்பத்தாரையும் மிரட்டி, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி கிரயப்பத்திரம் எழுதி வாங்கி கொண்டனர். எனது சொத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
நிலத்திற்காக அவர்கள் கொடுத்த பணத்தை நான் திரும்ப தருகிறேன். எனது சொத்துகளை மீட்டு தர வேண்டும். பி.ஆர்.பழனிச்சாமி, அவரது அக்கா மகன் காந்தி மற்றும் சண்முகம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு குறித்து மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில், கரூர் எஸ்.பி. சந்தோஷ்குமார் விசாரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications