வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு கூடுதல் நீர் தர முடியாது: கர்நாடக முதல்வர்
பல ஆண்டுகள் கழித்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் வரும் 19ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடக்கிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவது குறித்து கர்நாடக முதல்வர் கெஜதீஷ் ஷெட்டர் நேற்று பெங்களூரில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டினார். கர்நாடகத்தில் வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு கூடுதல் நீர் வழங்க முடியாது என்று காவிரி நதிநீர் ஆணையத்திடம் தெரிவிப்பது என்று அந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு ஷெட்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கர்நாடகாவின் 142 தாலுகாக்களில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது என்பதற்கான புள்ளிவிவரத்தை நாங்கள் பிரதமரிடம் தெரிவிப்போம். இங்கே வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் தர முடியாமல் இருக்கும் எங்கள் நிலைமையை அவரிடம் விளக்குவோம் என்றார்.
இதற்கிடையே காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் கர்நாடகத்திற்கு எதிராக முடிவு எடுத்துவிடாமல் இருக்க மத்திய அரசை வலியுறுத்தக் கோரி மாண்டியா மாவட்டத்தில் பந்த் நடந்தது. அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கர்நாடக மாநில நீர் வள அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டது.