19ல் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம்: கர்நாடகம், தமிழகம் இடையே அனல் பறக்கும் விவாதம்?

9 ஆண்டுகள் கழித்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் வரும் 19ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வரும் 20ம் தேதி வரை தமிழகத்திற்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட கர்நாடகம் ஒப்புக் கொண்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கர்நாடக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். கர்நாடகத்தில் வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு கூடுதல் நீர் வழங்க முடியாது என்று காவிரி நதிநீர் ஆணையத்திடம் தெரிவிப்பது என்று அந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே சம்பா நெல் சாகுபடிக்காக காவிரியில் நீர் திறந்து விடுமாறு கூட்டத்திற்கு வரும் கர்நாடக முதல்வரிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளார். இது தவிர காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறும் அவர் வலியுறுத்தவுள்ளார்.
காவிரி நீரைப் பெறுவதில் தமிழகமும், கூடுதல் நீரை கொடுக்க மாட்டோம் என்பதில் கர்நாடகமும் பிடிவாதமாக உள்ளது. இதனால் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications