மக்கள் திமுக பக்கம்-நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி நமதே: சாத்தூர் ராமச்சந்திரன்
விருதுநகர்: மின் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று விருதுநகர் திமுக செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் கிடப்பில் போடப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி திட்டத்தை அமல்படுத்த கோரியும், ரூ.597 கோடி மதிப்பீட்டிலான தாமிபரணி கூட்டுக்குடிநீர் திட்டப் பணியை விரைவுபடுத்த கோரியும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்திற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது,
விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த திமுக ஆட்சியின் போது ரூ.597 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன் துவக்க விழா அருப்புக்கோட்டையில் நடைபெற்றது.
மேலும் விருதுநகரில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மு.க.ஸ்டாலின் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நலத்திட்டங்கள் கடந்த திமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது என்பதற்காக, அதை தற்போது ஆட்சியில் உள்ள அரசு கிடப்பில் போடக்கூடாது. இவை மக்கள் நலத்திட்டங்கள் என்பதை கருத்தில் கொண்டு, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகரில் துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி முழுமை பெறாததால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் விலைவாசி உயர்வு மற்றும் மின்சார தட்டுப்பாட்டால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே இனி வரும் காலம் திமுகவின் காலம். வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். மக்கள் நம் பக்கம் உள்ளார்கள் என்ற உறுதியுடன் நாம் செயல்படுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications