வரியையும் வாங்கிக் கொண்டு வணிகர்களை இடைத்தரகர்கள் என்பதா? விக்கிரமராஜா கொதிப்பு
சென்னை: மத்திய அமைச்சர்கள் வால்மார்ட்டுக்கு வால் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் மோகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்த காரணத்தால் வணிகர்களிடையே நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தங்களது எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்த வரும் 20ம் தேதி (வியாழக்கிழமை) கடை அடைப்பை நடத்த தயாராகி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் ஆனந்த சர்மா, நாராயணசாமி ஆகியோர் மத்திய அரசின் தவறான முடிவை நியாயப்படுத்த நமது நாட்டு விவசாயிகளை காப்பதற்காக இந்த அன்னிய முதலீட்டை அனுமதிப்பதாக உண்மைக்கு மாறாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
1992ம் ஆண்டு விவசாயிகளை காப்பதற்காக உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக இதே காங்கிரஸ் அரசு கூறியது. 20 ஆண்டுகளாகியும் விவசாயிகளுக்கு எந்தவித பாதுகாப்பையும் தரவில்லை. மாறாக இந்த 20 ஆண்டுகளில் 1 லட்சத்து 70,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வணிகர்கள் அனைவரையும் இடைத்தரகர்கள் என்று அமைச்சர்கள் கொச்சைப்படுத்தி வருகின்றனர். இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த வணிகர்கள் மூலம் கோடிக்கணக்கான வரிகளை மத்திய அரசு பெற்று வருகின்றது என்பதை அமைச்சர்கள் மறந்துவிடக் கூடாது. மேலும் எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றியதுபோல மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒருபோதும் முடிவுகளை திரும்ப பெறமாட்டோம் என அறிவித்துள்ளார்.
இந்த மத்திய அமைச்சர்கள் வணிகர்களின் மீதான விரோதப் போக்கை நிறுத்தி வால்மார்ட்டுக்கு வால் பிடிப்பதை கைவிட வேண்டும். வணிகர்களை இடைத்தரகர்கள் என்று கூறுவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் தமிழகத்திற்கு இந்த அமைச்சர்கள் வருகை தரும்போது கருப்புக் கொடி காட்டி தமிழக வணிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications