இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா!

இலங்கையுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள ரொம்பவே கஷ்டப்படுகிறது, மெனக்கெடுகிறது இந்தியா. ஆனால் இலங்கையோ சீனாவுடன்தான் ரொம்பவே உறவாடி வருகிறது. இந்தியாவுக்கு எந்தத் திட்டத்தையும் கொடுக்க யோசிக்கும் இலங்கை, சீனா கேட்டால் மட்டும் உடனே தூக்கிக் கொடுத்து விடுகிறது.
இந்தியா கேட்டு வந்த பல முக்கியத் திட்டங்களையும் தர மறுத்த இலங்கை அவற்றை சீனாவுக்கே கொடுத்து இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் இலங்கைக்கு சமீபத்தில் சீனத் தலைவர் வூ பங்குவோ விஜயம் செய்தபோது முக்கியமான 16 ஒப்பந்தங்களை செய்து இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களாகும். ஒப்பந்தங்களின் மொத்தத் தொகை 760 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஆசியாவின் அற்புதமாக இலங்கை மாறும் என்றும் சீனா வர்ணித்துள்ளது. இது இந்தியாவுக்கு கவலை தரக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
விசா விதி விலக்கு, கடலோர மேம்பாடு, பொருளாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி முதலீடுகள் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தங்களில் சில.
வூ பங்குவோ என்பவர் அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆவார். ஈழத்தில் போரை இலங்கை முடித்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முதல் சீன முக்கியத் தலைவர் இந்த பங்குவோ.
இவரது வருகைக்கு முன்பாக சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் லீ வந்து போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இலங்கை மீது தாங்கள் வைத்துள்ள அரசியல் நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவது போல இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. மேலும், சீனாவை மிகப் பெரிய சக்தியாக மாற்றும் வகையிலான ஒப்பந்தங்களாக இவை அமைந்துள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.
மறுபக்கம், ஒவ்வொரு ஆண்டும் சீனா- இலங்கை இடையிலான வர்த்தக அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. 2011ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அளவு 3.14 பில்லியன் டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 49.8 சதவீதம் அதிகமாகும்.
இலங்கையில் நடந்து வரும் பல்வேறு முக்கியமான கட்டுமானப் பணிகளிலும் சீனாதான் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிற நாடுகளுக்கு, ஏன் இந்தியாவுக்குக் கூட இதில் இடமளிப்பதில்லை இலங்கை.
மேலும் மிகப் பெரிய அளவிலான திட்டமாக இருந்தால் முதலில் சீனாவைத்தான் நாடுகிறது இலங்கை. நட்பு நாடான இந்தியாவை அது கண்டு கொள்வதே இல்லை.
இலங்கையின் இந்த செயல் தொடர்நது இந்தியத் தரப்பை கடுமையாக நெளிய வைத்து வருகிறது, கோபப்படுத்தி வருகிறது. என்ற போதிலும், இலங்கையை நம்மால் கண்டிக்க முடியவில்லை, தட்டிக் கேட்க முடியவில்லை, எதுவுமே செய்ய முடியவில்லை என்பதே உண்மையாக உள்ளது.
இப்படி ஒருபக்கம் சிரித்துக் கொண்டும், மறுபக்கம் முதுகில் குத்தியும் நம்மை சீண்டிப் பார்த்து அசிங்கப்படுத்தி வரும் பின்னணியில்தான் இலங்கை அதிபராக உள்ள ராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கப் போகிறார். அவருக்கு ராஜ விருந்து அளித்து உபச்சாரம் செய்து குஷியடையக் காத்திருக்கிறது டெல்லி...
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற வசனம்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது....!












Click it and Unblock the Notifications