2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர்

ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை செல்போன் நிறுவனங்களுக்கு ஏலம் விடாமல் ஒதுக்கியதால் பெரும் முறைகேடு நடந்ததாகவும், இதனால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் கூறியதையடுத்து பெரும் பூகம்பம் வெடித்தது.
ஆனால், இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வகுத்த விதிகளின்படி முன்னாள் வந்தவர்களுக்கு முதலில் என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கியதாகவும் ராசா கூறி வருகிறார்.
மேலும் கணக்குத் தணிக்கை அதிகாரி கூறும் நஷ்டக் கணக்கு, 3ஜி ஸ்பெக்ட்ரம் விலையை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் யூகமாக தொகை என்றும் ராசா கூறுகிறார். இதையே தான் இப்போது மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் கபில் சிபலும் கூறி வருகிறார்.
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பி.சி. சாக்கோ தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜராகி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டோர் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்த கூட்டுக் குழுவானது பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்பது பாஜகவின் நீண்டகால கோரிக்கை. ஆனால் நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ இதனை நிராகரித்து வருகிறார்.
இன்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடபெற்றது. இன்றைய விசாரணைக்கு முன்னாள் நிதித்துறை செயலாளரும் தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநருமான சுப்பாராவ் அழைக்கப்பட்டிருந்தார்.
பாஜக வெளிநடப்பு:
ஆனால் மன்மோகன்சிங் மற்றும் சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்ப வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் இன்று நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பாஜக சார்பில் யஷ்வந்த் சின்கா மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் பாஜக சார்பில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றுளனர்.
சுப்பா ராவ் வாக்குமூலம்:
இந் நிலையில் இந்தக் குழு ஆஜரான ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பா ராவ், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீட்டால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்றார்.
அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் தான் விற்க வேண்டும், முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற ரீதியில் அதை விற்கக் கூடாது என்று ஸ்பெக்ட்ரம் விற்பனையின்போதும் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் சொல்லியிருக்க வேண்டும் என்று 2011ம் ஆண்டு மார்ச் மாதம் நிதித்துறை அமைச்சகத்திலிருந்து (பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது) பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் எனக்கு ஏற்புடையது அல்ல.
அதே போல ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறுவதும் தவறு. அப்படியே நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் அதை யாரும், இவ்வளவு ரூபாய் என்றெல்லாம் சொல்ல முடியாது. உத்தேசமாகவே மதிப்பிட முடியும். உண்மையில் அரசுக்கு எந்த பண நஷ்டமும் இல்லை என்று கூறியுள்ளார் சுப்பா ராவ்.












Click it and Unblock the Notifications