கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் ரஷ்ய நிறுவனமும் இழப்பீடு வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பொது நல வழக்கு மையம் உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணு உலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் இந்திய பொதுக் கருவூலமும், வரி செலுத்துவோரும் அதற்கான இழப்பீட்டை வழங்குவார்கள் என்று மத்திய அரசு, ரஷ்ய அரசிடம் உறுதி அளித்துள்ளது. அணு உலை விபத்து இழப்பீட்டுச் சட்டம்-2010, தன்னை மட்டுமே கட்டுப்படுத்தும் என்று மத்திய அரசு இதன்மூலம் உணர்த்தியுள்ளது.
விபத்து தொடர்பான அனைத்துப் பொறுப்புகள் மற்றும் கடமைகளில் இருந்தும் ரஷிய நிறுவனத்துக்கு விதிவிலக்கு அளித்துள்ளது. இது சட்டவிரோதமாகும். அரசின் இந்த ஒப்பந்தம் அபாயகரமான பின்விளைவுகளைக் கொண்டுள்ளது. அணு உலை விபத்து இழப்பீட்டுச் சட்டத்தின்படி, அணு எரிபொருளை சப்ளை செய்யும் நிறுவனத்துக்கும் விபத்தில் பொறுப்பு உண்டு. அதன்படி பார்த்தால், ரஷ்ய நிறுவனத்துக்கு விபத்து தொடர்பான பொறுப்பில் இருந்து விலக்களித்து செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானதாகும்.
எனவே, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விபத்து ஏதாவது ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை ரஷ்ய நிறுவனமும் வழங்குவதற்கு வகை செய்யும் விதத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் ரஷ்ய அரசுடன் கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக செய்து கொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications