6 சிலிண்டர் சரிதான்.. ஆனா இப்படி செய்தால் சரியாக இருக்கும்: பிரதமருக்கு 'ஐடியா' தரும் அமைச்சர்

ஆண்டிற்கு ஒரு குடும்பத்துக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த வாரம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதனால் வீட்டு உபயோகத்திற்காக தற்போது ரூ.386 முதல் ரூ.420 வரை மானிய விலையில் பெறும் சிலிண்டர்கள், ஒரு குடும்பத்திற்கு 6 மட்டுமே பெற முடியும். 7வது சிலிண்டர் முதல் ரூ.800 வரை கொடுக்க வேண்டியுள்ளது.
இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே இதை எதிர்த்து எதிர்கட்சிகள் தரப்பில் வரும் 20ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மானிய சிலிண்டர்கள் அளிப்பது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பில் மாற்றம் செய்யுமாறு, மத்திய உணவு துறை அமைச்சர் கே.வி.தாமஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பரிந்துரை கடிதம் ஒன்றை அளித்துள்ளார். இதில் மானிய சிலிண்டர்கள் வழங்குவதில் சில மாறுதல்களை ஏற்படுத்தினால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கே.வி.தாமஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
* மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள போல, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கலாம்.
* அதற்கு பிறகு மானியத்தை முழுமையாக துண்டிப்பதற்கு பதிலாக 7வது சிலிண்டரில் இருந்து 12வது சிலிண்டர் வரை மானிய விலையை விட ரூ.50 கூடுதலாக வசூலித்து கொள்ளலாம்.
* மேலும் 13வது சிலிண்டரில் இருந்து 24வது வரை வாங்கப்படும் ஒவ்வொரு சிலிண்டர்களுக்கும் மானிய விலையில் ரூ.150 அதிகமாக வசூலிக்கலாம்.
* ஆண்டில் 24 சிலிண்டர்களுக்கு மேல் வாங்கப்படும் வீடு உபயோக சிலிண்டர்களுக்கு மானியத்தை ரத்து செய்யலாம்.
* இது போன்ற கட்டண உயர்வை அமல்படுத்தினால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படாது என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications