20-ந் தேதி பாரத் பந்த்தில் அதிமுக பங்கேற்க வேண்டும்: தா. பாண்டியன் வேண்டுகோள்
சென்னை: மத்திய அரசுக்கு எதிராக வரும் 20-ந் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் அதிமுகவும் கலந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு, டீசல் விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தா.பாண்டியன் பேசியதாவது:
பொதுமக்களை பாதிக்கும் வகையில் தவறான நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக அன்னிய நாட்டு முதலீட்டை, சில்லரை வார்த்தகத்தில் 51 சதவீதமும், விமான போக்குவரத்து துறையில் 49 சதவீதமும், தகவல் தொழில்நுட்பத்துறையில் 74 சதவீதமும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதுதவிர டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் பொதுமக்களும் பாதிக்கப்படுவதுடன், உற்பத்தியும் பாதித்து நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வரும் மத்திய அரசின் பொதுமக்கள் விரோத செயல்களை கண்டித்துள்ளார். இந்நிலையில் வரும் 20-ந்தேதி மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் கடையடைப்பு மற்றும் போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் அ.தி.மு.க.வும் கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications