சிவகாசியில் குடியிருப்பு பகுதியில் வெடி விபத்து: தீயணைப்பு வீரர் காயம்
சிவகாசி: சிவகாசியில் குடியிருப்பு பகுதியில் இருந்த லாரி ஷெட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தீ பிடித்ததில் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சிவகாசியில் பட்டாசு விற்பனை ஏஜெண்டுகள் பலர் முறையான அனுமதி பெறாமல் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பட்டாசுகளை சேமித்து வைக்கின்றனர். அங்கிருந்து லாரிகளில் பட்டாசுகளை ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். சிவகாசி முஸ்லீம் தைக்கா தெருவில் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு மத்தியில் ஒரு வீடு முத்து பிரியா டிரான்ஸ்போர்ட்டின் லாரி ஷெட்டாக செயல்பட்டு வந்தது.
நேற்று இரவு 7 மணிக்கு அந்த வீட்டில் இருப்பு வைக்கப்பட்ட பட்டாசுகளை ஏற்றிச் செல்ல லாரி ஒன்று வந்தது. அப்போது வீட்டில் இருந்த பட்டாசுகளில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர் எல்லாம் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையே அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் தீயணைப்புத் துறையினர் வெளியே நின்றபடியே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் அரை மணிநேரத்தில் தண்ணீர் தீர்ந்துவிட்டது. அதன் பிறகு வேறு ஒரு வண்டி வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார். அவர் உடனே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதலிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 39 பேர் பலியான சோகத்தில் இருந்தே அப்பகுதி மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது நடந்துள்ள விபத்து அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications