லாபகரமான ரூட்டில் இயங்கிய பஸ்களை நிறுத்தியது ஏனோ?-ஆந்திர எல்லை பகுதி மக்கள் புலம்பல்
சித்தூர்: தமிழக, ஆந்திர மாநிலங்களின் எல்லைப் பகுதியில் இயக்கப்பட்ட வந்த தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் எந்த முன்அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டதால், அப்பகுதி மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
தமிழக, ஆந்திர மாநிலங்களின் எல்லைப் பகுதியில் சித்தூர் மாவட்டம் உள்ளது. இங்கு உள்ள நகரி, கார்வேட் நகரம், நாராயணவனம், புத்தூர் போன்ற இடங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன.
திருத்தணி பணிமனையில் இருந்து நகரி-சென்னை இடையேயான வழித்தடத்தில் 3 பஸ்களும், பள்ளிப்பட்டு-சென்னை இடையே தினமும் 4 முறையும், கார்வேட் நகரம்-திருத்தணி இடையிலான வழித்தடத்தில் தினமும் 6 முறையும் பஸ்கள் இயக்கப்பட்டன.
மேலும் பொதட்டூர்பேட்டை-நாராயணவனம் இடையே தினமும் 6 முறையும், நகரி-சென்னை (வழி: ஊத்துக்கோட்டை-பெரியபாளையம்) இடையே தினமும் 4 முறையும் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களின் மூலம் தமிழக எல்லை பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பயன் அடைந்ததால், நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு நல்ல வருமானமும் கிடைத்து வந்தது.
ஆனால் தற்போது இவற்றில் சில பஸ்கள்(97கே, 98) குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை. மேலும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சில பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தமிழக, ஆந்திர எல்லை பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர், வியாபாரிகள், வேலைக்கு செல்வோர் ஆகியோர் போக்குவரத்திற்கு வழியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் வருமானத்திலும் இழப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications