20ம் தேதி நடக்கும் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்திற்கு தேமுதிக ஆதரவு: விஜயகாந்த்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய அரசு கடந்த 13ம் தேதி டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 5 உயர்த்தியதன் விளைவாக தமிழ்நாட்டில் ரூபாய் 6.07 அளவிற்கு வரிகள் உள்பட உயர்ந்துள்ளது. இந்திய அரசு மேலும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதன் விளைவாக மேலும் கூடுதல் சிலிண்டர்களை ரூபாய் 400 அளவிற்கு அதிகமாக கொடுத்து சந்தை விலையில் பெற வேண்டும். இது மட்டுமில்லாமல் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவிகித அந்நிய நாட்டு கம்பெனிகள் முதலீடு போடுவதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்திய அரசின் இந்த முடிவுகள் சாதாரண ஏழை, நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும்.
அன்றாட வாழ்க்கையே அவர்களுக்கு பிரச்சினையாகிவிடும். இந்திய அரசின் இத்தகைய பிற்போக்குத்தனமான போக்கை எதிர்த்து தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் வருகிற 20-9-2012 வியாழக்கிழமை அன்று இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளன. இதை தேமுதிக சார்பில் நான் வரவேற்பதுடன், முழு அடைப்பு போராட்டத்திலும் தேமுதிக கலந்து கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications