ரமணன் சொல்லிட்டார்.. அப்ப மழை எப்படி பெய்யும்?!

இந்திய வானிலை ஆய்வு மையம் எப்படி இவ்வளவு துல்லியமாக, மிகச் சரியாக, தவறான வானிலை அறிக்கையைத் தருகிறது என்பது உலகளவில் பெரிய அதிசயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
இதில் ரமணனைக் குறை சொல்லி பிரயோஜனமில்லை. நம் வானிலை ஆய்வு மையத்திடம் உள்ள தொழில்நுட்பமும் அவர்கள் சார்ந்துள்ள செயற்கைக் கோள்களுமே இந்த 'துல்லியத்துக்கு' காரணம்.
இப்படித்தான், இந்த ஆண்டு பருவ மழை மிகச் சரியான அளவில் பெய்யும் என்று நம் ஊரில் ரமணனும் மற்ற மாநிலங்களில் அந்தந்த ரமணன்களும் சொல்லிவிட்டுப் போய்விட, நமது விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் நிம்மதியாக கிரிக்கெட் பார்க்க போய்விட்டார். மத்திய அரசும் நிம்மதியாக நிலக்கரி ஊழலில் பாஜகவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது.
ஆனால், சொன்னபடி மழை தான் வரவில்லை. இதையடுத்து அவசர அவசரமாக வறட்சி நிவாரணத் திட்டங்களைப் போடும் வேலையை மத்திய அரசு ஆரம்பிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இது தொடர்பாக பிரதமர், உணவுத்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் கூடி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு பருவ மழை போதிய அளவுக்குப் பெய்யாது என்று புதிய வானிலை அறிக்கையை வாசித்தது நமது வானிலை ஆய்வு மையம்.
அவர்கள் வாசித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பியபோது பிடித்த அடை மழை நாட்டின் பல பகுதிகளையும் வெள்ளக்காடாக்கியது. இவ்வாறு அடுத்தடுத்து தப்புத் தப்பாக வானிலை அறிக்கைகளை தந்தது நமது ஆராய்ச்சி மையம்.
இந் நிலையில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஜோதிடர் பண்டிட் கேதார் சர்மா என்பவர், இதெல்லாம் நடக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும் என்று கூறியுள்ளார்.
சரத் பவார் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் ஆஸ்தான ஜோதிடரான இவர் கூறுகையில், பருவ மழை பொய்க்கும் என்று வானிலை மையம் சொன்ன போதே நான் சரத் பவாரிடம் சொன்னேன்.. இந்த மழை கொஞ்சம் லேட்டாக வரும்.. போதிய அளவு பெய்துவிடும். கவலைப்பட வேண்டாம் என்றேன். நான் சொன்னபடியே மழை பெய்துவிட்டது என்கிறார்.
மேலும், இந்த ஆண்டு செப்டம்பரில் வழக்கத்தை விட அதிகமான மழை பெய்யும் என்கிறார் இந்த 'ரமணன்'.
பேசாமல் இவரையே வானிலை ஆய்வு மையம் தங்களது தலைமை விஞ்ஞானியாக்கிவிட்டால் என்ன?!












Click it and Unblock the Notifications