பணியில் இருக்கையில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ. ஓய்வு பெற்ற பிறகு கைது
நாகர்கோவில்: பணியில் இருந்தபோது ரூ.5,000 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ. சையது முகமது ஓய்வு பெற்ற பிறகு கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரசாத். அவரது மகளை கடந்த 1998ம் ஆண்டு 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. இது குறி்த்து அவர் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டராக இருந்த திட்டுவிளையைச் சேர்ந்த சையது முகமது அவரிடம் ரூ.5,000 லஞ்சம் கேட்டார். லஞ்ச பணத்தை வீட்டில் வந்து வாங்கிக் கொள்வதாகவும கூறினார். இது பற்றி பிரசாத் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
கடந்த 9-11-1998 அன்று சப்-இன்ஸ்பெக்டர் சையது முகமது ஆசாரிப்பள்ளத்தில் உள்ள மணிகண்ட பிரசாத் வீ்ட்டிற்கு சென்று ரூ.5,000 வாங்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 14.1.2003 அன்று சையது முகமதுவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். மதுரை உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் சையது முகமதுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. அவர் கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் திட்டுவிளை பஸ் நிறுத்தத்தில் அவர் நின்று கொண்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஹெக்டே தர்மராஜுக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் விரைந்து சென்ற போலீசார் சையது முகமதுவை நேற்று காலை கைது செய்து நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications