''சீக்கிரம்..5.30 மணி ஆயிருச்சு, கரண்ட் போயிரும், மிக்சியில அரைக்க வேண்டியதை அரைச்சிட்டியா?''

இன்னும் ரெண்டு நிமிஷம் இருக்கு, இன்னும் ஒருநிமிஷம் இருக்கு கவுண்டவுன் போல ஓட ஆரம்பித்து விட்டது தமிழ்நாட்டு ஜனங்களின் அன்றாட வாழ்க்கை. கரண்ட் அபயர்ஸ் பற்றி யாரும் இப்போது கவலைப்படுவது இல்லை. மாறாக கரண்ட் இருக்கா, இல்லையா, இருந்தா, எப்ப போகும், போனா எப்ப வரும் இதுதான் மக்களின் ஒரே பேச்சாக, மூச்சாக மாறிப் போயுள்ளது.
ஊரிலிருந்து யாராவது போன் போட்டால் கூட அங்க மழை தண்ணி பெய்யுதா? என்று கேட்டது போய் அங்க கரண்ட் இருக்கா? எத்தனை தடவை போகுது, 12 மணி நேரமா, அட பரவாயில்லையே, எங்க ஏரியாவுல 10 மணி நேரம்தான் புடுங்குறாங்க என்ற விசாரிப்புகளுக்கு மக்கள் பழகிப் போய் விட்டார்கள்.
பருவமழையில் நனைகிறோமோ இல்லையோ இரவில் வியர்வை மழையில் நனைந்து கொண்டே உறங்க வேண்டியிருக்கிறது. எப்போ தீரும் இந்த கரண்டு பிரச்சினை என்று கேட்டது போய் அதுவே நாளடைவில் பழகிப்போய்விட்டது.
இன்னும் மூன்று மாதத்தில் சரியாகும், 6 மாதத்தில் சரியாகும் என்று அரசிடம் இருந்தும், அமைச்சரிடம் இருந்தும் நாளொரு அறிவிப்புகளும், பொழுதொரு பேட்டியுமா வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சொன்னதுபோல மின்சாரம் வந்த பாடில்லை. ஆனால் அறிவிப்புகள் மட்டும் ஊடகங்களில் நின்றபாடில்லை.
சென்னையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒரே நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. பிற்பகலில் 12 மணி முதல் 2 மணிவரையிலும் அதேபோல் மாலை 6 மணிக்கு துண்டிக்கப்படுகிறது. இரவில் கேட்கவே வேண்டாம் சொல்லாமல் கொல்லாமல் துண்டிக்கப்படுவதால் தலைநகரில் வசிப்பவர்களைத் தவிர தமிழனின் இரவுகள் தூக்கம் தொலைந்த இரவுகளாகவே விடிகின்றன.
இதற்கு என்றைக்கு விடிவு காலம் வரும் என்பதுதான் ஒவ்வொரு தமிழனின் முன்னால் நிற்கும் கேள்வி. தலைநகரத் தமிழன் மட்டும்தான் இன்று 'பவரோடு' இருக்கிறான், மற்றவர்கள் எல்லாம் பேட்டரி பிடுங்கப்பட்ட பொம்மைக் கார்களைப் போல அவலக் கொலுவீற்றிருக்கும் துயரம்தான்...!












Click it and Unblock the Notifications