வெலிங்டன் ராணுவ மையம், கடலோரப் பகுதிகள், நாகை துறைமுகத்தை படம் பிடித்த பாக். உளவாளி!
சென்னை: பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தமீம் அன்சாரி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்தத் தேவையான விவரங்கள் சேகரித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அதிராமப்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் மகன் தமீம் அன்சாரி(35). தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அழகம்மாள் கலனியில் வசிக்கும் அவர் வெளிநாட்டு காலணிகள் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்து வந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அன்சாரி சில முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் கொடுக்கப் போவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து இந்திய கடற்படை பற்றி ஆவணங்கள், சிடிக்களுடன் இலங்கை செல்ல விமான நிலையம் சென்று கொண்டிருந்த அன்சாரியை திருச்சி டோல்கேட் ஜங்ஷனில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தநர். அதன் பிறகு க்யூ பிரிவு போலீசார் அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அன்சாரி திருச்சி விமான நிலையத்தை பல கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அதிராமபட்டினத்தில் உள்ள அன்சாரியின் அலுவலகமான லபீர் எக்ஸ்போர்ட்ஸில் சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தமீம் அன்சாரி தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே அவரது கோடீஸ்வர கனவு கலைந்தது. இந்நிலையில் இலங்கையில் வசிக்கும் தமிழரான ஹாஜி அவருக்கு அறிமுகமானார். அவர் அன்சாரி்க்கு பணம் சம்பாதிக்க எளிய வழியைக் காண்பிப்பதாகக் கூறி அவரை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த தூதரகத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் தமிழக கடலோரப் பகுதிகளை படம்படித்து கொடுத்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாகக் கூறியுள்ளார்.
கடலோரப் பகுதிகளை படம்பிடித்து அதை சிடியில் ஏற்றி அந்த சிடியை கொழும்பு தூதரகத்தில் உள்ள இளநிலை அதிகாரி சாஜியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அன்சாரியும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகை, காரைக்கால், மல்லிப்பட்டினம் பகுதிகளை படம்பிடித்து அதை சிடியில் ஏற்றினார். கடலோரப் பகுதிகளில் ராணுவ நிலைகள் உள்ள இடங்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்கள் ஆகியவற்றின் படங்கள், எந்த இடத்தில் இறங்கினால் யார் கண்ணிலும் படாமல் ஊருக்குள் செல்லலாம் என்ற குறிப்புகள் அந்த சிடியில் உள்ளன.
அன்சாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிடிக்களில் ஒன்றில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம், நாகை துறைமுகம் மற்றும் தென்மாவட்ட கடலோர பகுதிகளின் படங்கள் உள்ளன. வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தின் முழு விவரம் அதில் உள்ளது.
விசாகப்பட்டினம் துறைமுகம், அங்குள்ள நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்டவற்றை படம் பிடிக்க அவர் அடுத்த வாரம் ஆந்திரா செல்வதாக இருந்தது. அதன் பிறகு கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படை தளத்தை வீடியோ எடுக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். அன்சாரியின் வங்கிக் கணக்குக்கு இலங்கையில் இருந்து லட்சக் கணக்கில் பணம் வந்ததால் உளவுத் துறையின் பார்வை அவர் மீது விழுந்ததில் சிக்கினார்.
அவர் தஞ்சையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் இருந்தும் ஏராளமான தகவல்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications