நபிகளை இழிவுபடுத்தும் படத்திற்கு எதிர்ப்பு: காபூலில் 12 பேரைக் கொன்ற தற்கொலைப் படை பெண்
காபூல்: நபிகளை இழிவுபடுத்தும் அமெரிக்க படத்தை கண்டித்து ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண் வெடி குண்டுகள் நிரப்பிய காரை மினி பஸ் மீது மோதியதில் 12 வெளிநாட்டவர்கள் பலியாகினர்.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியுள்ள அமெரிக்க படத்தைக் கண்டித்து உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலைய ஊழியர்களை ஏற்றிக் கொண்டு மினி பஸ் ஒன்று காபூல் இன்டர் கான்டினென்ட்டல் ஹோட்டலுக்கு இன்று காலை 6.45 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஊழியர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள்.
அப்போது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு வெள்ளை நிற செடானை பெண் ஒருவர் ஓட்டி வந்து அந்த மினி பஸ் மீது பயங்கரமாக மோதினார். இதில் காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதில் அந்த பஸ்ஸில் இருந்த 12 வெளிநாட்டவர்கள் பலியாகினர்.
நபிகளை இழிவுபடுத்தி அமெரிக்காவில் படம் எடுத்துள்ளதால் இந்த தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்ப்-இ-இஸ்லாமி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அப்துல்லா ஷா என்ற ஆசிரியர் கூறுகையில்,
நான் வேலைக்கு செல்ல பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது மின் பஸ் மீது கார் மோதி வெடித்த சப்தம் பயங்கரமாக இருந்தது. அடுத்த 10 நிமிடத்திற்கு எனக்கு எதுவுமே கேட்கவில்லை என்றார்.
நபிகளை இழிவுபடுத்திய படத்தைக் கண்டித்து கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கெய்ரோவில் போராட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications