டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை பாரத் பந்த்: ஸ்தம்பிக்குமா இந்தியா?

டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியும், வீட்டு உபயோகத்திற்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும் நாட்டின் முக்கிய எதிர்கட்சியான பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை நாடு தழுவிய பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தமிழகத்தை சேர்ந்த திமுக. பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை பந்த்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.
தமிழகத்தில் திமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள் இயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழக ஆளுங்கட்சியான அதிமுக பந்த் குறித்து இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் முதல்வர் ஜெயலலிதா டீசல் விலை உயர்விற்கு கண்டனம் தெரிவித்துள்ளதால், அதிமுக பந்த்திற்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் முக்கிய தொழிற்சங்கள் பந்த்தில் கலந்து கொள்ள போவதாக அறிவித்துள்ளதால், தமிழகத்தில் அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயங்கப்படலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று இரவு முதல் அனைத்து ஆட்டோ, வேன், கார்கள் ஆகியவை பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பந்த்திற்கு பலத்த ஆதரவு உள்ளதால், தமிழகத்தில் இருந்து செல்லும் பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
தமிழகத்தில் பந்த்தின் போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், 1.15 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் காலை முதலே மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையிலும், டெல்லியிலும் உள்ள வியாபாரிகள் அமைப்புகள் பந்த்திற்கு பலத்த ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நள்ளிரவு முதல் பந்த் நடத்த ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. இதனால் இன்று நள்ளிரவு முதல், நாளை நள்ளிரவு வரை 24 மணி நேரம் நாடு முழுவதும் உள்ள 75 லட்சம் லாரிகள் இயங்காது. தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றன.












Click it and Unblock the Notifications