உடனே நாடாளுமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபியுங்கள்.. பாஜக கோரிக்கை
டெல்லி: மமதா பானர்ஜியின் முடிவை வரவேற்றுள பிரதான எதிர்க்கட்சியான பாஜக, உடனடியாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், அடிப்படையில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஒரு காங்கிரஸ் அரசுதான். அங்கு கூட்டணி கலகலத்துப் போய் விட்டது. மமதா பானர்ஜி இப்போது போய் விட்டார். இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.
நாடாளுமன்றத்தில் தற்போது மன்மோகன் சிங் அரசு சிறுபான்மை அரசாகி விட்டது. எனவே இது தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது தார்மீகக் கடமையாகும். இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். இந்தக் கோரிக்கை தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
காங்கிரஸ் கட்சி மிகவும் அராஜகப் போக்குடனும், பிடிவாதக் குணத்துடனும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எந்த முக்கிய முடிவையும், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி அது எடுப்பதில்லை.
எதிர்க்கட்சிகளுடன் பேசுவதில்லை, கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதில்லை. சுயேச்சையாக, தன்னிச்சையாக அனைத்து முடிவுகளையும் அது எடுத்து வருகிறது. இது மிகவும் அராஜகமான போக்காகும். இந்த அராஜகப் போக்கு காங்கிரஸ் டிஎன்ஏவிலேயே உள்ளது.
காங்கிரஸ் அரசு எடுக்கும் எந்த முடிவும் மக்களைப் பாதிக்கும் வகையிலேயே இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றார் பிரசாத்.












Click it and Unblock the Notifications