பிரதமருடன் சோனியா முக்கிய ஆலோசனை... என்ன பேசினார்கள்?

நேற்று இரவு தனது அதிரடி முடிவை அறிவித்தார் மமதா பானர்ஜி. இதனால் காங்கிரஸ் தரப்பில் பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை என்ற போதிலும் கூட நெருக்கடியான நிலையில் ஆட்சி இருப்பதால் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று காலை 10 மணிக்கு அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
மமதா பானர்ஜியின் நேற்றைய அதிரடி முடிவால் மத்திய அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. இருப்பினும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் துணையால் ஆட்சி கவிழும் அபாயம் இப்போதைக்கு இல்லை என்பதால் காங்கிரஸ் கட்சி தைரியத்துடன்தான் இருக்கிறது.
அதேசமயம், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மமதா சில யோசனைகளையும் தந்துள்ளார், வெள்ளிக்கிழமை வரை அவகாசமும் கொடுத்துள்ளார். இதுகுறித்து சோனியா இன்று முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மமதா பானர்ஜியின் இந்த 'ஆபர்' குறித்து அவர் பிரதமருடன் தீவிரமாகப் பேசியதாகவும் தெரிகிறது. இருப்பினும் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
மமதாவின் கோரிக்கைகள்...
- ஏற்றப்பட்ட டீசல் விலையை ரூ. 3 முதல் 4 ஆக குறைக்க வேண்டும்.
- கேஸ் சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை வருடத்திற்கு 12 என உயர்த்த வேண்டும்.
- நேரடி அன்னிய முதலீடுகளை சில்லறை வர்த்தகத்தில் அனுமதிப்பது என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும்.
இதுவே மமதா வைத்துள்ள கோரிக்கைகள் ஆகும். இதை பிரதமர் ஏற்பாரா என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications