டீசல் விலை உயர்வு: சென்னையில் 10,000 மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

மத்திய அரசு டீசல் விலையை ரூ.5 உயர்த்தியது. மேலும் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர்களில் ஆண்டிற்கு 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து நாளை நாடு தழுவிய பந்த் நடத்த போவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக விசைப்படகு மீனவர்கள் நலச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராமேஸ்வரம் போஸ், மாநில செயலாளர் மல்லிப்பட்டினம் தாஜுதீன், பொருளாளர் தூத்துக்குடி சேவியர் வாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சமீபத்தில் மத்திய அரசின் டீசல் விலை உயர்வு அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் 10 ஆயிரம் மீனவர்கள் ஒன்று திரட்டி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேற்கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதுவரை அனைத்து மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லமாட்டார்கள். தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவன தலைவர் அன்பழகனார், தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நலச் சங்கத்தின் மாநிலத்தலைவர் வேணுகோபால் ஆகியோர் பேரணி, ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்குவார்கள் உட்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications