ராமநாதபுரம் வல்லபை விநாயகர் கோவில் பந்தலுக்கு மர்ம கும்பல் தீ வைப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த் வல்லபை விநாயகர் கோவில் பந்தலுக்கு மர்ம கும்பல் தீ வைத்த சம்பவத்தால் அப்பகுதி பதட்டமாக காணப்படுகிறது.
ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சந்தைக்கடை பகுதியில் பழமை வாய்ந்த வல்லபை விநாயகர் கோவில் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு கடந்த 9 நாட்களாக இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி தினமான இன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம கும்பல் ஒன்று அந்த பந்தலின் முன்பகுதியில் தீ வைத்துவிட்டு தப்பியோடியது. அப்போது கோவிலை சுத்தம் செய்யும் பெண் அந்த கும்பல் தீ வைத்ததைப் பார்த்து கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் பந்தலில் இருந்த ஸ்பீக்கர்கள், மைக் செட்டுகள், சேர்கள் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமாகின. மேலும் பந்தலின் பெரும் பகுதி எரிந்துவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி இளைஞர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரும் அங்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து கோவில் முன்பு கூடியிருந்தவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி அன்று நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி பதட்டமாகக் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications