ராஜபக்சேவை எதிர்த்துப் போராட்டம் - ம.பி. எல்லையில் வைகோ தடுத்து நிறுத்தம்

ராஜபக்சே ம.பி மாநிலம் சாஞ்சிக்கு 21ம் தேதி வருகிறார். அங்கு சர்வதேச புத்த பல்கலைக்கழகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. திமுக உள்ளிட்ட அத்தனைக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சேலத்தில் விஜயராஜ் என்ற ஆட்டோ டிரைவர் ராஜபக்சே வருகையைக் கண்டித்து தீக்குளித்து உயிர் நீத்துள்ளார்.
ஆனால் மத்திய அரசும், ம.பி. அரசும் ராஜபக்சே வருகையை ரத்து செய்ய முடியாது என்று கூறி விட்டன. இதையடுத்து ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் வைகோ. மேலும் தனது தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஏராளமான பேருந்துகளில் சாஞ்சிக்கேக் கிளம்பினார்.
இன்று வைகோ உள்ளிட்டோர் மத்தியப் பிரதேச மாநில எல்லையை அடைந்தனர். அங்கு மகாராஷ்டிரா - மத்தியரப் பிரதேச எல்லையில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பந்துர்னா என்ற ஊரை அவர்கள் அடைந்தபோது போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து ஜபல்பூர் சரக ஐஜி மதுகுமார் கூறுகையில், மதிமுகவினர் வந்த வாகனங்கள் அனைத்தும் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் மேற்கொண்டு முன்னேற அனுமதிக்கப்படவில்லை என்றார்.
இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அவர்களை எப்படி ம.பி அரசும், போலீஸாரும் கையாளப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
மதிமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications