விநாயகர் சதுர்த்தி: தமிழகமெங்கும் உற்சாகக் கொண்டாட்டம்
கோவை: விநாயகர் சதுர்த்தி விழா தமிழகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் ஈச்சனாரி விநாயகர் கோவில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கமாக இருக்கிறது.
விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறார்க்ள். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் பிள்ளையாருக்கு படைத்து வழிபடுகின்றனர்.
கூப்பிட்டால் வரும் பிள்ளையார்
விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். மண்ணோ, மஞ்சளோ பிடித்து வைத்தால் பிள்ளையார் ஆகிவிடுவார்.
விநாயகர் ஆதி பரம்பொருள். அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை. அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.
விநாயகர் சதுர்த்தி விரதம்
விநாயகர் சதுர்த்தி விரதம் இருந்த பார்வதி தேவி சிவபெருமானை கரம் பிடித்தார் என்கின்றன புராணங்கள். இன்றைக்கும் பெண்கள் மனதில் நினைத்தவரை கணவராக கரம் பிடிக்க விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.
கோலாகல கொண்டாட்டம்
விநாயகர் குளக்கரையிலும் இருப்பார், அரசமரத்தடியிலும் இருப்பார். எங்கும் நிறைந்திருக்கும் விநாயகருக்கு இன்று கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இது தவிர ஆங்காங்கே விநாயகர் சிலைகளை சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
பிள்ளையாருக்கு என்று உள்ள சிறப்பு வாய்ந்த கோவில்களான பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆலயம், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஈச்சனாரி விநாயகர் ஆலயங்களில் அதிகாலை முதலே நடைபெற்று வரும் சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர்.
பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் திருவிழாவான செவ்வாய்கிழமை காலை விநாயகர், சண்டிகேஸ்வரர், திருத்தேர் விழா நடைபெற்றது. இதில் சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து மூலருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியன்று காலை 9.30 மணியளவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கற்பக விநாயகரான மூலவருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. பிள்ளையார்பட்டியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications