உகாண்டா நாடாளுமன்றத் தேர்தலில் 19 வயது மாணவி வெற்றி!

உகாண்டா நாட்டில் அதிபராக இருப்பவர் யோவேரி முசவெனி. இவருடைய செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நாட்டில் அதிகரித்து வரும் வறுமையும், ஏழ்மையும் மக்களை பெரும் சலிப்புக்குள்ளாக்கி வருகிறது. குற்றச் செயல்களின் எண்ணிக்கையும் உயர்ந்தபடியே இருப்பதால் அதிபர் கடும் அதிருப்திக்குள்ளாகி வருகிறார்.
இதனால் மக்கள் அதிபரின் கட்சியை நிராகரிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 8 முறை நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடந்து விட்டது. அதில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிபரின் கட்சி ஜெயித்தது. இதனால் நாடாளுமன்றத்திலும் ஆளுங்கட்சிக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது.
இந்த இக்கட்டான நிலையில் யூசுக் என்ற தொகுதியில் உறுப்பினராக இருந்த ஆளுங்கட்சி எம்.பி திடீரென மரணமடைந்தார். இதனால் அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதிலும் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தால், அதிபரின் பதவி காலி என்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன், மரணமடைந்த எம்.பியின் மகளான 19 வயதான பிரஸ்கோவியாவை வேட்பாளராக அறிவித்தது ஆளுங்கட்சி. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
எப்படி சின்னப் பெண்ணை வேட்பாளராக்கலாம் என்று எதிர்ப்புகளும் எழுந்தன. நாடாளுமன்றத்தை அதிபர் கேலிக்கூத்தாக்கி அவமதித்து விட்டார் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அதை ஆளுங்கட்சி பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் பிரஸ்கோவியாவுக்கு மக்களிடையே அனுதாப ஓட்டுக்கள் கிடைத்ததால் அவர் எளிதாக வெற்றி பெற்று விட்டார். இதையடுத்து ஆளுங்கட்சியினர் அங்கு நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
தற்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கப் போகிறார் இந்த இளம் எம்.பி. பிரஸ்கோவியா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications