காவிரிப் பிரச்சினை... நாளை கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் சம்பா பயிர்கள் நீரின்றி வாடி வருவதையும், கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுப்பதையும் சுட்டிக் காட்டிப் பேசிய ஜெயலலிதா, தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்குக் கோரிக்கை விடுத்தார்.
தமிழகம் கேட்கும் தண்ணீரை விட முடியாவிட்டாலும் கூட தினசரி 1 டிஎம்சி வீதம் 30 நாட்களுக்கு விடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் தமிழகத்தின் கோரிக்கையை முற்றாக நிராகரித்து விட்டார் கர்நாடக முதல்வர் ஷெட்டார். மேலும் கூட்டத்திலிருந்தும் அவர் வெளிநடப்புச் செய்து விட்டார்.
இதனால் கோபமடைந்த முதல்வர் ஜெயலலிதா, கர்நாடகம் தமிழகத்தின் கோரிக்கையை முற்றாக நிராகரித்து விட்டது. எனவே மீண்டும் உச்சநீதிமன்றம் செல்வதைத் தவிர தமிழகத்திற்கு வேறு வழியில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் ஷெட்டார். அப்போது காவிரிப் பிரச்சினையில் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து அவர் விவாதிக்கவுள்ளார்.
போராட்டத்தைத் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு
இந்தநிலையில், அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகளைப் பொறுத்து தமிழகத்திற்குத் தண்ணீர் விடுவதை எதிர்த்து நடத்தி வரும் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக கர்நாடக விவசாயிகள் அமைப்புகள் அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications