புதிய நிர்வாகிகளை அறிவிக்கத் தயாராகும் ஸ்டாலின்.. அழகிரிக்கு என்ன கிடைக்கும்?

இதுதொடர்பாக திமுக இளைஞர் அணி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை நியமனம் செய்வதற்கான நேர்காணலும், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களுக்கு மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளரை நியமனம் செய்வதற்கான நேர்காணலும் கடந்த 9-ந் தேதி முதல் 11-ந்தேதி வரையும், 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரையும் இளைஞர் அணி தலைமையகமான அன்பகத்தில் நடந்தது.
இந்த நேர்காணலை திமுக பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் முன்னின்று நடத்தினார். அவருடன் இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் மா.சுப்பிரமணியம், இ.ஜி.சுகவனம், எம்.பி., சேலம் ராஜேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆகியோர் உடனிருந்தனர்.
மொத்தம் 36 மாவட்டங்கள், 7 மாநகரங்கள், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய 2 மாநிலங்களுக்காக நடத்தப்பட்ட இந்த நேர்காணலில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 705 பேர் பட்டதாரிகள், 207 பேர் வக்கீல்கள், 112 பேர் என்ஜினீயர்கள், 182 டிப்ளமோ படித்தவர்கள், 8 பேர் டாக்டர்கள், மற்றவர்கள் பள்ளிக்கல்வி படித்தவர்கள்.
நேர்காணலில் கலந்துகொண்டவர்களில் இருந்து மாவட்டம், மாநகரம், மாநிலங்களுக்கு ஒரு அமைப்பாளர், 4 துணை அமைப்பாளர்கள் என்ற விகிதத்தில் 2 வாரத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிர்வாகிகள் நியமனத்தில் மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வாய்ப்புகள் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே ஸ்டாலின், அழகிரி இடையிலான அடுத்த மோதல் இந்த நிர்வாகிகள் நியமனத்தின் மூலம் தொடங்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பில் திமுகவினர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications