மாறி மாறிப் பேசிக் குழப்பியடிக்கும் முலாயம்.. காதில் புகை விடும் இடதுசாரிகள்!
டெல்லி: விடிஞ்சா ஒரு பேச்சு, பொழுது அடைஞ்சா ஒரு பேச்சு என்ற ரீதியில் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசி வருவதால் இடதுசாரி கட்சிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மமதா பானர்ஜி தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதையடுத்து தற்போது டெல்லி வட்டாரத்தில் முலாயம் சிங் பெரிய ஆளாகி விட்டார். அவரது தயவு காங்கிரஸுக்குத் தேவை என்பதால் முலாயமை அரவணைத்துப் போக ஆரம்பித்துள்ளது காங்கிரஸ்.
ஆனால், இடதுசாரிகள், தேவெ கெளடா உள்ளிட்டோருடன் இணைந்து 3வது அணி அமைப்போம் என்று பேசி ஆரம்பத்தில் காங்கிரஸ் வயிற்றில் புளியைக் கரைத்தார் முலாயம் சிங். இதனால் இடதுசாரிக் கட்சிகள் பெரும் குஷியாகின. கெளடாவோ ஒரு படி மேலே போய் பிரதமர் பதவிக்கு முலாயம் சிங் யாதவ்தான் பொருத்தமான ஆள் என்று ஜிங்கு சக்கா அடித்துப் பேசினார்.
அத்தோடு நில்லாமல், பாரத் பந்த்தில் இடதுசாரி தலைவர்களுடன் பங்கேற்று காங்கிரஸ் தரப்பை மேலும் கலங்கடித்தார் முலாயம் சிங். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தற்போது கொடுத்து வரும் ஆதரவு தொடரும் என்று அறிவித்து இடதுசாரித் தலைவர்களை கடுப்படித்தார்.
இந்தச் சூழ்நிலையில் தற்போது மேலும் ஒரு குழப்பப் பேச்சை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது மதவாத பாஜக ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு தருகிறது என்று கூறியுள்ளார் முலாயம் சிங். இதனால் மன்மோகன் சிங் அரசு மற்றும் காங்கிரஸுக்கு நிச்சயம் பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், இடதுசாரி தலைவர்கள் மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை நாங்கள் திரும்பப் பெற மாட்டோம் என்றார்.
சரி இடைத்தேர்தல் வருமா என்ற கேள்விக்கு அவர் கூறுகையில், அப்படி ஒரு வாய்ப்பை இப்போதைக்கு நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
சரி மூன்றாவது அணி வருமா என்று கேட்டபோது 2014 லோக்சபா தேர்தலின்போது மூன்றாவது அணி அமையலாம் என்றார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் ஆதரவு தருகிறோம் என்றார் முலாயம் சிங்.












Click it and Unblock the Notifications