தமிழக கப்பலில் தூத்துக்குடி பயிற்சி மாலுமி் மாயம்: கேப்டன் உள்பட 37 பேரிடம் தீவிர விசாரணை
தூத்துக்குடி: ஒடிசாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் பணியாற்றிய மாலுமி மாயமானது குறித்து தனி்ப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணன் மகன் கண்ணன். அவர் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான எம்.வி. தமிழ் அண்ணா என்ற சரக்கு கப்பலில் பயிற்சி மாலுமியாக பணியாற்றி வந்தார். இந்த கப்பல் கடந்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு தூத்துககுடிக்கு புறப்பட்டது. மறுநாள் தாய் லெட்சுமியிடம் கண்ணன் செல்போனில் பேசியுள்ளார். பின்னர் 5ம் தேதி கண்ணனை திடீரென காணவில்லை. கடலோர காவல்படை மற்றும் விமானப்படை விமானம் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி அந்த கப்பல் தூத்துககுடிக்கு வந்ததும் தூத்துக்குடியைச் சேர்ந்த கேப்டன் ரோஜர் தருவைகுளம் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கு தெர்மல்நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தன் மகன் கண்ணனை கண்டுபிடித்து தருமாறு சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி 15 நாட்களுக்குள் அவரை உயிருடனோ, பிணமாகவோ நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என டிஜிபி மற்றும் பூம்புகார் ஷிப்பிங் நிறுவன மேலாளர் தாமசுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கேப்டன் ரோஜர் உள்ளிட்ட 37 பேரிடம் கண்ணன் என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications