ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு- சென்னையில் ரயில் மறியல், தூதரகம் முற்றுகை- திருமா, வேல்முருகன் கைது

இலங்கை தூதரகம் முற்றுகை- திருமாவளவன் கைது
சென்னையில் இலங்கை தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். இதனால் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் காலை 9 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தின் போது ராஜபக்சேவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
ரயில் மறியல்- வேல்முருகன் கைது
இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை மறிக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் அறிவித்திருந்தார். இதனால் அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து வேல்முருகன் மற்றும் அவரது கட்சியின் 500க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து வேல்முருகனும் அவரது கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
பாஜக அலுவலகம் மீது தாக்குதல்
இதனிடையே ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்த மத்திய பிரதேச பாஜக அரசைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் நோக்கியும் முற்றுகைப் போராட்டத்தை தமிழின உணர்வாளர்கள் நடத்தினர். முற்றுகைப் போராட்டத்தின் போது பாஜக அலுவலகம் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
திருச்சியில்...
திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினரும் நாம் தமிழர் இயக்கத்தினரும் இணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கத்தில் பெரியார் தத்துவ மையம், ஆதித் தமிழர் பேரவையினர் லால்குடி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் மகிந்த ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக புதிய தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications